admk amma team ready to welcome for dinakaran
இரட்டை இலை விவகாரத்தில் லஞ்சம் கொடுக்க முயன்று கைது செய்யப்பட்ட தினகரன் திஹார் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்துள்ளார். சென்னை திரும்பும் அவரை வரவேற்க அதிமுக அம்மா அணி தடபுடலாக தயாராகி வருகிறது.
டெல்லி நட்சத்திர ஓட்டலில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது பிரபல இடைத்தரகர் சுகேஷ் சந்திரா என்பவர் 1.30 கோடி ரூபாய் பணத்துடன் பிடிபட்டார்.

அவரிடம் போலீசார் விசாணை நடத்தியபோது அதிமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையை அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுத்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து டெல்லி போலீசார் டி.டி.வி. தினகரனை விசாரணை நடத்தினர். பின்னர், ஏப்ரல் 25-ந் தேதி தினகரன் கைது செய்யப்பட்டார். அவருடன் பணப்பட்டுவாடா செய்ய உதவியதாக அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவும் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து அவர்கள் இரண்டு பேரும் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தங்களை ஜாமீனில் விடுதலை செய்ய கோரி தினகரனும், மல்லிகார்ஜூனாவும், டெல்லி நீதிமன்றத்தில் மனு அளித்தனர். அந்த மனுவை விசாரித்த டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் டி.டி.வி. தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனா ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இதையடுத்து திஹார் சிறையிலிருந்து வெளியே வந்த தினகரனுக்கு செந்தில் பாலாஜி, வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன் உள்பட 10 எம்எல்ஏக்கள், 5 எம்.பிக்கள், கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் டிடிவி தினகரன் தங்கியுள்ளார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்திக்கையில் சென்னை திரும்பியவுடன் கட்சிப் பணிகளில் ஈடுபடுவேன் எனவும், யாரும் யாருக்கும் பயந்து நடப்பதில்லை எனவும் அனைவருடனும் நட்புடன் இருப்பதையே தான் விரும்புவதாகவும் தெரிவித்தார்.

தன்னை கட்சியில் இருந்து நீக்க பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்றும்,தன்னை யாரும் கட்சியை விட்டு நீக்கவில்லை என்றும் தினகரன் தெரிவித்தார்.
இந்நிலையில், நாளை காலை தினகரன் சென்னை வர உள்ளார். அவருக்கு வரவேற்பு அளிக்க அதிமுக அம்மா அணி சார்பில் தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
