அமைச்சரானார் நடிகை ரோஜா...! இனி சினிமாவில் நடிக்க மாட்டேன்..! வேதனையில் ரசிகர்கள்...
ஆந்திர மாநில அமைச்சராக நடிகை ரோஜா பதவியேற்றுக்கொண்டதையடுத்து இனி திரைப்படங்களில் நடிக்கமாட்டேன் என கூறியுள்ளார். இதனால் தமிழ், தெலுங்கு திரைப்பட ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.
அமைச்சரவை மாற்றம்
ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடந்த 2019ம் ஆண்டில் முதல்வராக பதவி பொறுப்பேற்ற பின்னர், அப்போது ஜெகன் அமைச்சரவையில் 25 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஆனால், இரண்டரை ஆண்டுகள் மட்டுமே இந்த அமைச்சர்கள் பதவி வகிப்பர் என்றும், அதன் பின்னர் புதியவர்களுக்கு மீதமுள்ள இரண்டரை ஆண்டுகள் வாய்ப்பு வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டது. தற்போது அமைச்சரவை விரிவாக்க பணியை ஜெகன்மோகன் ரெட்டி மேற்கொண்டார். இதையடுத்து கடந்த வாரம் அனைத்து அமைச்சர்களின் ராஜினாமாக்களை ஜெகன்மோகன் ரெட்டி பெற்றுக்கொண்டார். ஏற்கனவே இருந்த மந்திரிகளில் அனுபவம் வாய்ந்த பத்து பேரோடு புதிதாக 15 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அதில் நகரி எம்எல்ஏ நடிகை ரோஜாவிற்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதனால் நகரியில் ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் தொண்டர்கள், ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் சிலை அருகிலும் நகரியில் உள்ள ரோஜாவின் வீட்டின் அருகிலும் கட்சி அலுவலகத்தின் முன்பாகவும் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
நடிகை ரோஜாவிற்கு அமைச்சர் பதவி
இதனையடுத்து நேற்று அமைச்சராக நடிகை ரோஜா பதவியேற்க மேடைக்கு சென்ற போது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உற்சாகமாக கை தட்டி வரவேற்பு கொடுத்தனர். இதனால் மகிழ்ச்சியின் எல்லைக்கே நடிகை ரோஜா சென்றார். இதனையடுத்து நடிகை ரோஜாவிற்கு சுற்றுலாத்துறை மற்றும் கலை விளையாட்டுதுறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரோஜா, முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கொடுத்த வாய்ப்பை வாழ்நாளில் எப்போதும் மறக்க மாட்டேன் என கூறினார். தொடர்ந்து பேசியவர் இனி ஆந்திர மாநில மக்களுக்காக தீவிர பணியாற்ற உள்ளதால் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சியில் இனி பங்கேற்க மாட்டேன் என கூறினார்.
திரைப்படங்களில் நடிக்க மாட்டேன்
நடிகை ரோஜா அமைச்சரானது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து வந்த நிலையில் தற்போது திரைப்படங்களில் நடிக்க போவது இல்லையென்று அமைச்சர் ரோஜா அறிவித்துள்ளது. அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.