கோ பேக் மோடி என ட்விட்டரில் பதிவிட்ட நடிகை ஓவியா... போலீஸில் புகார் அளித்த பாஜக..!
கோ பேக் மோடி என்ற ட்விட்டரில் பதிவிட்ட நடிகை ஓவியாவுக்கு எதிராக பாஜகவினர் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திரமோடி சென்னைக்கு இன்று வருகைப் புரிந்து ராணுவத்துக்காக தயாரிக்கப்பட்ட அர்ஜூன் ரக பீரங்கியை ராணுவத்திடம் ஒப்படைத்தார். மேலும் சென்னையில் விரிவுபடுத்தப்பட்ட மெட்ரோ ரயில் சேவையையும் தொடங்கி வைத்தார். சென்னை கடற்கரை - அத்திப்பட்டு இடையேயான 4-வது புதிய பாதை, விழுப்புரம் - கடலூர்- மயிலாடுதுறை - தஞ்சாவூர், மயிலாடுதுறை- திருவாரூர் மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதைகளையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். சென்னை ஐஐடியின் தையூர் புதிய வளாகத்துக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியில் வருகைக்கு எதிராக ட்விட்டரில் #GoBackModi என்ற ஹாஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங் ஆனது. பாஜக எதிர்ப்பாளர்களும் எதிர்க்கட்சியினரும் பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் இந்த ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்நிலையில் நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான ஓவியா கோபேக்மோடி என்ற ஹேஷ்டேக்கை தன்னுடைய ட்விட்டர் பதிவில் இட்டிருந்தார். இதனால் ஓவியாவை பாஜகவினர் சோஷியல் மீடியாவில் விமர்சித்துவந்தனர். இந்நிலையில் #GoBackModi என்று ஹாஷ்டேக் இட்ட ஓவியாவுக்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.