திருமாவளவனுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க சென்ற நடிகை குஷ்பு கைது... போலீஸார் அதிரடி நடவடிக்கை..!
சிதம்பரத்தில் திருமாவளவனைக் கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்ற நடிகை குஷ்பு கைது செய்யப்பட்டார்.
மனுதர்மத்தில் பெண்களை பற்றி இழிவாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாக விசிக தலைவர் தொல். திருமாவளவனைக் கண்டித்து பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பாஜக அறிவித்தது. திருமாவளவன் எம்.பி.யாக இருக்கும் சிதம்பரம் தொகுதியிலும் பாஜக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் பாஜக மகளிரணி சார்பில் நடிகை குஷ்பு, முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் பங்கேற்பர் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சிதம்பரம் காவல் துறை தடை விதித்தது. திருமாவளவன் எம்.பி-யாக உள்ள சிதம்பரம் தொகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றால் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் என்பதால் போலீஸார் இந்த முடிவை எடுத்தனர். ஆனால்,‘போலீசார் தடை விதித்தாலும், சிதம்பரம் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’ என்று பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சிதம்பரத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு பங்கேற்பதற்காக நடிகை குஷ்பு இன்று காலை சென்னையிலிருந்து ஈசிஆர் வழியாக கிளம்பினார். முட்டுக்காடு அருகே குஷ்பு வந்தபோது அவரை தடுத்து போலீஸார் கைது செய்தனர்.