மெர்சலில் யாரையும் பாதிக்கும் வகையில் வசனங்கள் இல்லை - ஒரே போடு போட்ட தணிக்கைக்குழு...
நடிகர் விஜயின் மெர்சல் திரைப்பட காட்சிகளில் யாரையும் பாதிக்கும் வகையில் வசனங்கள் இல்லை எனவும், காட்சிகளை நீக்கவேண்டும் எனில் தணிக்கைகுழுவிடம் மீண்டும் அனுமதி பெறவேண்டும் மண்டல தணிக்கைக்குழு அதிகாரி மதியழகன் தெரிவித்துள்ளார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் மெர்சல். இப்படம் வெளியாகும் முன்பு பல சர்ச்சைகளின் காரணமாக இழுக்கடிக்கப்பட்டு வந்தது.
ஆனால் பல எதிர்ப்புகளையும் மீறி தீபாவளி அன்று மெர்சல் படம் வெளியானது. வெளியான பின்னரும் மெர்சல் திரைப்படம் பல சர்ச்சைகளுக்கு ஆளாகி வருகிறது. காரணம், அப்படத்தில் மத்திய அரசு கொண்டுவந்த ஜி.எஸ்டி குறித்தும் பணமதிப்பிழப்பு குறித்தும் வசனங்கள் உள்ளன.
இந்த வசனங்கள் ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பலத்த வரவேற்பை பெற்றுள்ளன. ஆனால் பாஜக மத்தியில் கடும் கொந்தளிப்பை பரிசாக கொடுத்துள்ளது. மேலும் மெர்சல் படத்தில் இருந்து அந்த குறிப்பிட்ட வசனங்களை நீக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தி வந்தது.
மேலும் குறிப்பிட்ட வசனங்களை நீக்க கோரி மெர்சல் திரைப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகருக்கு மிரட்டல் வந்ததாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், பாஜக எதிர்பால் மெர்சல் திரைப்படத்தின் சர்ச்சைகுரிய வசனம் நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதைதொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மண்டல தணிக்கைக்குழு அதிகாரி மதியழகன் நடிகர் விஜயின் மெர்சல் திரைப்பட காட்சிகளில் யாரையும் பாதிக்கும் வகையில் வசனங்கள் இல்லை எனவும், காட்சிகளை நீக்கவேண்டும் எனில் தணிக்கைகுழுவிடம் மீண்டும் அனுமதி பெறவேண்டும் என்றும் தெரிவித்தார்.
கருத்துரிமை அடிப்படையிலேயே வசனங்கங்கள் உள்ளதாகவும், ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களில் தவறு எதுவுமில்லை எனவும் குறிப்பிட்டார்.