நடிகர் விஜய், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி திடீரென சந்தித்து பேசியுள்ள சம்பவம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்யை அவரது பனையூர் இல்லத்தில் புதுவை முதல்வர் ரஙகசாமி சந்தித்து பேசியுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் விஜயின் மக்கள் இயக்கம் தனித்து போட்டியிடும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

வரும் பிப்ரவரி 19இல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், பிப்ரவரி 22இல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ஆட்சியை இழந்து எதிர்கட்சியாக உள்ள அதிமுக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிவாகை சூட வியூகம் அமைத்து வருகிறது. 

இதில் கூட்டணி கட்சியான பாமக மற்றும் பாஜக என இரண்டு கட்சிகளும் தனித்து போட்டியிடுவதால், அதிமுகவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது. இதற்கிடையே முன்னணி நடிகரான விஜயின் மக்கள் இயக்கம் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இது பொதுமக்களிடையே கவனம் ஈர்த்து இருக்கிறது.

ஏற்கனவே கடந்த வருட இறுதியில் நடைபெற்ற 9 மாவட்டங்களுக்காக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டமக்கள் இயக்கம் 100-க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் விஜயின் மக்கள் இயக்கம் கவனம் பெற்றுள்ளது. இந்த தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் நேற்று முடிந்துள்ளது.

இந்நிலையில் நேற்று புதுவை முதல்வர் ரங்கசாமி, நடிகர் விஜய்யை அவரது பனையூர் இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார். சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில், நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாகவே நடைபெற்றதாக முதல்வர் ரங்கசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஊரக உள்ளாட்சி தேர்தல், நகர்புற உள்ளாட்சி தேர்தல் என வரிசையாக விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டியிட்டு வரும் நிலையில், இந்த போட்டி அனைத்தும் விஜய் அரசியலுக்கு வருதற்காக முன்னோட்டம் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த சந்திப்பு தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமி கோரிக்கை வைத்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.