புதிய இணையதளம் தொடங்கினார் ரஜினி...! அதிரடியாக களத்தில் இறங்கும் சூப்பர்ஸ்டார்...!
நான் அரசியலுக்கு வருவேன் என நடிகர் ரஜினி நேற்று அறிவித்திருந்தநிலையில் இன்று புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளார்.
நான் அரசியலுக்கு வருவேன் எனவும் இது காலத்தின் கட்டாயம் எனவும் நடிகர் ரஜினிகாந்த் நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் எனவும் அதற்கு முன்பு ஒவ்வொரு தெருவிலும் தனது ரசிகர் மன்றம் தொடங்கப்பட வேண்டும் எனவும் ரசிகர்களிடம் குறிப்பிட்டார்.
முதல் கட்டமாக கட்சியின் இளைஞர் அணி, வழக்கறிஞர் அணி உள்ளிட்ட அணிகளை உருவாக்கும் பணிகளை மேற்கொள்ளவும் நற்பணி இயக்க நிர்வாகிகளுக்கு ரஜினி உத்தரவிட்டுள்ளார்.
உண்மை, உழைப்பு, உயர்வு இதுதான் தாரக மந்திரம். நல்லதே நினைப்போம். நல்லதே செய்வோம். நல்லதே நடக்கும். இதுதான் நமது கொள்கை. வரும் தேர்தலில், நம்ம படையும் இருக்கும் என்று ரஜினிகாந்த் கூறினார்.
மேலும் பேசிய ரஜினி, தனது அரசியல் ஆன்மீக அரசியலாக இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.
ரஜினியின் இந்த அரசியல் பிரவேச அறிவிப்பு தமிழக அரசில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த நீண்ட நாட்களாகவே தனது அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி கூறி வந்த நிலையில், அவரது இந்த அறிவிப்பு குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று தமது இணைதளத்தை தொடங்கியுள்ளார் ரஜினி. தமது ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைக்க www.rajinimandram.org என்ற இணையதளத்தை தொடங்கியுள்ளார்.
மேலும் தனது அரசியல் பிரவேசத்திற்கு வரவேற்பு தெரிவித்திருக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத ரசிகர் மன்ற உறுப்பினர்கள் தங்கள் மன்றத்தின் விபரங்களுடனும் மற்றும் நல்ல அரசியல் மாற்றத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களும் தங்களின் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண் கொண்டு இணையதள பக்கத்தில் பதிவு செய்து கொண்டு உறுப்பினர் ஆகலாம் எனவும் நாம் அனைவரும் சேர்ந்து தமிழ்நாட்டில் ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.