‘கமல் ஒரு திமுக கைக்கூலி’... கோவையில் உலக நாயகனை அலறவிட்ட ராதா ரவி...!
வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக நடிகர் ராதா ரவி கோவை தெற்கில் பிரசாரம் மேற்கொண்டார்
வர உள்ள தேர்தலில் சட்டமன்ற தேர்தலில் சில தொகுதிகளில் கடும் போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன், பாஜக சார்பில் வானதி சீனிவாசனும் நேருக்கு நேர் மோதுகின்றனர். அதுமட்டுமின்றி காங்கிரஸ் திமுக கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களில் ஒருவரான மயூரா ஜெயக்குமார், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான அப்துல் வகாப் ஆகியோர் போட்டியிடுவதால் கோவை தெற்கு தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்த முதல் நாளில் இருந்தே கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனுவாசனுக்கும், கமல் ஹாசனுக்கும் இடையே வாக்கு சேகரிப்பில் கடும் போட்டி நிலவிவருகிறது. காலை நேரங்களில் வாக்கிங் சென்ற படியே கமல் ஹாசன் கோவை தெற்கில் வாக்கு சேகரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அதேபோல் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக கலா மாஸ்டர், கெளதமி, ராதா ரவி என நட்சத்திர பட்டாளங்கள் பிரசார களத்தில் பங்கேற்கின்றனர்.
வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக நடிகர் ராதா ரவி கோவை தெற்கில் பிரசாரம் மேற்கொண்டார் அப்போது பேசிய அவர், கமல் ஒரு திமுகவின் கைக்கூலி. வானதி சீனிவாசனின் வாக்குகளை பிரிப்பதற்காக திமுக சார்பில் களமிறக்கப்பட்டுள்ளார். நல்லவன் கிடையாது. இளைஞர்கள் அவரை நம்ப கூடாது. தன்னை நம்பி வந்த தாய்மார்கள் வாழ்வில் நிம்மதி இல்லாமல் செய்தவர் என சகட்டுமேனிக்கு ஒருமையில் விமர்சனம் செய்தார். நான் கமலை ஒருமையில் அழைக்க காரணம் நானும், அவரும் சின்ன வயதில் இருந்தே ஒன்றாக வளர்ந்தவர்கள், இருவருக்கும் ஒரே வயது அதனால் தான் அப்படி கூப்பிடுகிறேன் என்று விளக்கமும் அளித்தார்.