மிரட்டுற வேலையெல்லாம் வேணாம்... - அமைச்சர்களை எச்சரிக்கும் பிரகாஷ்ராஜ்...!
நடிகர் கமலை மிரட்டும் தொனியில் அமைச்சர்கள் பேசக்கூடாது என்றும் கமல் வைக்கும் குற்றச்சாட்டுக்கு அமைச்சர்கள் பதில் அளிக்க வேண்டும் என்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமலஹாசன் அண்மைக்காலமாக அரசியலில் தீவிரமாக இறங்கியுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் அரசியல் தொடர்பான கருத்துக்களை பதவிட்டு வருகிறார். சென்னை கேளம்பாக்கத்தில் நடைபெற்ற ரசிகர் நற்பணி மன்ற விழாவில் விரைவில் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்தார்.
அவரது பிறந்த நாளான நவம்பர் 7 ஆம் தேதி அன்று இதற்காக ஒரு செயலியை அறிமுகப்படுத்தினார். அதே நேரத்தில் அரசியல் விமர்சனங்களை தன்னுடைய டுவிட்டர் இணையதளத்தில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
நடிகர் கமலஹாசன் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பு பல அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து வருகிறார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை திருவனந்தபுரம் சென்று சந்தித்தார்.
இதைத் தொடர்ந்து அவர் டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவாலை சென்னையில் சந்தித்துப் பேசினார். பின்னர் கடந்த வாரத்தில் கொல்கத்தா சென்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்துப் பேசினார்.
இதையடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இதுகுறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார் அம்மா இருக்கும் போது வாயை மூடிக்கிட்டு, இருந்த கமல் இப்போது வாய்பேசுகிறார் எனவும் சினிமாவில் நடித்து சேர்த்த புகழ் பத்தாதா? அரசியலிலும் அபத்தமாக பேசி பேர் சேர்க்கணுமா எனவும் கேள்வி எழுப்பினார்.
என்ன குற்றத்தை, திருட்டை கண்டார் அவர் ? அதை நிரூபிக்கட்டும். அதை நிரூபித்த பின் பேசட்டும். வீணாக, பொயான குற்றச்சாட்டுக்களை சொல்லிவிட்டு செல்லக்கூடாது. அவர் சொன்ன குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லையென்றால் நிச்சயம் அவர் மீது வழக்கு போடுவோம் என ஜெயக்குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து நடிகர் பிரகாஷ்ராஜிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், நடிகர் கமலை மிரட்டும் தொனியில் அமைச்சர்கள் பேசக்கூடாது என்றும் கமல் வைக்கும் குற்றச்சாட்டுக்கு அமைச்சர்கள் பதில் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.