ஓராண்டுக்குப் பிறகு அமைச்சர் விஜய பாஸ்கருக்கு ஆப்பு வைத்த வருமான வரித்துறை… கடும் நடவடிக்கை எடுக்க எடப்பாடிக்கு உத்தரவு !!
கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜய பாஸ்கர் வீட்டில் நடந்த வருமான வரித்துறை ரெய்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு தமிழக அரசுக்கு பெரம் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் விஜய பாஸ்கருக்கு சொந்தமான கம்பெனிகள், பள்ளிகள் என 10 க்கும் மேற்பட்ட இடங்களிலும் சோதளை நடைபெற்றது.
அப்போது ஏராளமான ஆவணங்களை வருமான வரித்துறையினர் அள்ளிச் சென்றனர். மேலும் அமைச்சர் விஜய பாஸ்கரின் உதவியாளர் ஒருவரிடம் இருந்தும் கோடிக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து மே 17 ஆம் தேதி மீண்டும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. மேலும்.புதுக்கோட்டையில் உள்ள விஜயபாஸ்கரின் வீட்டிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இது தொடர்பாக விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வருமான வரித்துறை அலுவலகத்துக்குச் சென்று விளக்கம் அளித்தனர். முதல் நாள் சோதனையின் போது விஜயபாஸ்கர் வீட்டில் கிடைத்த நகைகள், ஆவணங்கள் ஆகியவை லாக்கரில் வைத்து சீல் வைக்கப்பட்டது.
ஆனால் இந்த ரெண்டு நடைபெற்று ஓராண்டுக்கும் மேலாகிவிட்ட நிலையில் அவர் மீது எந்த நடவடிக்கையும் ஏன் எடுக்கப்படவில்லை என எதிர்கட்சியினர் குற்றம்சாட்டி வந்தனர். அதன் பிறகு அமைச்சர் விஜய பாஸ்கர் மீது குட்கா வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வருமானவரித்துறை பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக தமிழக அரசுக்கு வருமான வரித்துறை எழுதியுள்ள கடிதத்தில் , பல்வேறு தரப்பிடம் இருந்து 20 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
இதையடுத்த அமைச்சர் விஜய பாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தமிழக அரசுக்கு வருமான வரித்துறை எழுதி உள்ள கடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது