இந்து மதத்தை இழிவுப்படுத்தினால் நாக்கை துண்டிக்க பயப்படாதீங்க... சிவலிங்கேஸ்வர சுவாமிகளின் சர்ச்சை வாய்ஸ்!
இந்து மதத்தை இழிவுபடுத்தும் செயல்களில் யாராவது ஈடுபட்டால், அவர்களுடைய நாக்கை துண்டிக்கவும் பயப்பட தேவையில்லை என்று காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
கோயமுத்தூரில் காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் செய்தியாளர்களைச் சந்தித்தார். “முருகக் கடவுள்களுக்காக பல பாடல்களை ஆன்மீகவாதிகள் எழுதியுள்ளனர். கவசம் என்பது முருகனுக்கு மட்டுமல்ல எல்லாத் தெய்வங்களுக்கும் கவசம் பாடப்பட்டுள்ளது. இதை அறுவறுக்கதக்க வகையிலான பாடல் என்று வீடியோவில் ஒருவர் சொல்வது அநியாயம். இதைத் தட்டிக்கேட்க ஆட்கள் இல்லாத நிலையில், காவி கொடியுடன் ஒரு சில இயக்கங்கள் மட்டுமே போராடுகின்றன.
இப்படிப்பட்ட பேச்சுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இந்து மதத்தை இழிவுபடுத்தும் செயல்களில் யாராவது ஈடுபட்டால், அவர்களுடைய நாக்கை துண்டிக்கவும் பயப்பட தேவையில்லை. அந்த அளவுக்கு இந்துக்களின் மனம் வேதனையடைந்துள்ளது. கந்த சஷ்டி கவசத்தை வீடுகள்தோறும் வழங்க வேண்டும். கந்த சஷ்டியை தெரியாதவர்களே இருக்கக் கூடாது. முருகனின் வேல் கொச்சைபடுத்தப்பட்டுள்ளது. கொச்சைபடுத்தியவரை இறைவன் தண்டிப்பான்.
தென் மாவட்டங்களில் முத்துராமலிங்க தேவரை, முருக கடவுளாக பக்தர்கள் பார்க்கிறார்கள். முருகனை யாராவது இழிவுபடுத்தினால் முத்துராமலிங்க தேவரின் பக்தர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்” என்று ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் தெரிவித்தார்.