எழுத்தாளர்களை மிரட்டி பணிய வைக்க முடியாது …. வைரமுத்துவுக்கு ஆதரவாக களமிறங்கிய படைப்பாளிகள்!!
கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதலும்,மிரட்டலும் நிறுத்தப்பட வேண்டும் என்றும் எழுத்தாளர்களை மிரட்டி பணிய வைக்க முடியாது என்று 36 படைப்பாளர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததற்காக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுத்து வரும் நிலையில் வைரமுத்துவுக்கு ஆதரவாக 36 படைப்பாளிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், மாலன், சா.கந்த சாமி, ச.தமிழ் செல்வன் உள்ளிட்ட 36 படைப்பாளிகள் ஒன்றிணைந்து வைரமுத்துவுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதலும் மிரட்டலும் நிறுத்தப்பட வேண்டும் என்று அறிக்கை வாயிலாக கூறியுள்ளனர்.
அதில், “ தமிழ் இலக்கியத்தை வளப்படுத்திய முக்கியமான ஆளுமைகள் குறித்து வைரமுத்து தொடர்ந்து எழுதிவரும் செயல்பாட்டின் தொடர்ச்சியாகவே தினமணி நாளிதழில் எழுதியும் ராஜபாளையத்தில் பேசியுமிருக்கிறார்.
“தமிழை ஆண்டாள்” என்ற கட்டுரையில் சொல்லபடாத ஒரு சொல்லை அவர் சொல்லியதாகச் சொல்லி மக்களை திசைத் திருப்பும் காரியங்களை சிலர் திட்டமிட்டு செய்கிறார்கள். இனக்கலவரத்தை தூண்டப்பார்க்கிறார்கள். ஒன்றுப்பட்ட தமிழ் படைப்பாளர்கள் இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
அந்த ஆய்வுக் கட்டுரையில் கவிஞர் வைரமுத்து ஆனாடாளின் பெருமையை பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மேற்கோள் காட்டியிருக்கிறார். அதில் ஆராய்ச்சியாளரின் மேற்கோளையும் சுட்டிக்காட்டிருகிறார்.
கடவுள் மறுப்பாளர்களும் கற்க வேண்டிய தமிழ், ஆண்டாளின் தமிழ் என்பதை இந்தக் கட்டுரையில் வைரமுத்து புலப்படுத்தியிருக்கிறார்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கவிஞர் வைரமுத்துவுக்கு எதிரான போராட்டங்களும், தாக்குதல்களும் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.