a special scheme for disable persons Binarayee vijayan announced

கேரள மாநிலத்தில், மாற்றுத்திறனாளிகளை தனித்தனியே கவனம் செலுத்தி பராமரிக்கும் திட்டம், விரைவில் கொண்டு வரப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

மறுவாழ்வு திட்டம்

கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பரசினக்கடவு நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வுத் திட்டத்தை முதல்வர் பினராயி விஜயன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக அந்தூர், பரியாரம், அழிக்கோடு, எரன்ஹோலி பஞ்சாயத்துகளிலும், பையனூர், மட்டனூர் நகராட்சிகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பினராயி விஜயன், “ மாநிலத்தில் உள்ள 7 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும், ஆதரவு அளிக்கும் விதமாக முழுமையான திட்டத்தை அரசு கொண்டு வர உள்ளது. மற்ற மாநிலங்களைப் போல் அல்லாமல், முழுமையான ஆய்வு நடத்தப்பட்டு, இந்த திட்டம் செயல்படுத்தப்படும். மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொருவரும் தனித்தனியே அக்கறை செலுத்தி கவனிக்கப்படுவார்கள்.

இங்கு தொடங்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மேம்பாட்டு திட்டம், கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் உள்ள உளவியல் துறை, மாநில சமூக நீதித்துறை ஆகியவற்றால் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. முறையான பயிற்சியும், பாதுகாப்பும் அளித்தால் சமூகத்துக்கு மாற்றுத்திறனாளிகள் மிகப்பெரிய பங்களிப்புகளை அளிப்பார்கள். அவர்களின் சிறப்பு திறமைகளை வளர்க்க உதவ வேண்டும்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.