அமமுகவில் சுற்றுசூழல் பாதுகாப்பிற்கு தனி அணி.. தாம்பரம் நாராயணனை தலைவராக அறிவித்து டிடிவி தினகரன் அதிரடி.
பல்வேறு வகையான வளங்கள், நீர்நிலைகள் உட்பட இயற்கை நமக்கு வழங்கிய கொடைகளை எல்லாம் பாதுகாத்து எதிர்கால தலைமுறையினருக்கு அளிக்க வேண்டிய பொறுப்பு நமது கரங்களில் இருக்கிறது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு அணி உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் திமுக சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அணி உருவாக்கப்பட்ட நிலையில் அமமுகவும் இந்த அணியை உருவாக்கியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கழகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு அணியை உருவாக்கி இயற்கை நமக்களித்த நன்கொடைகளை பாதுகாக்கும் பணிகளில் உண்மையான அக்கறையோடு நிற்போம்.
மேலும், உலக அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விவாதங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கான இயக்கங்கள் மட்டுமல்லாது, ஒவ்வொரு தனிமனிதனும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அக்கறையோடு செயல்பட வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது. நம்முடைய நல வாழ்வுக்காக சுற்றுச்சூழலை பாதுகாப்பதும், அது தொடர்பான விழிப்புணர்வை எல்லா தரப்பினரிடமும் ஏற்படுத்துவதும் அவசியமாகிறது. பல்வேறு வகையான வளங்கள், நீர்நிலைகள் உட்பட இயற்கை நமக்கு வழங்கிய கொடைகளை எல்லாம் பாதுகாத்து எதிர்கால தலைமுறையினருக்கு அளிக்க வேண்டிய பொறுப்பு நமது கரங்களில் இருக்கிறது.
இதற்காக அரசியலிலும் சுற்றுச்சூழலுக்கான கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து செயல்பட வேண்டியுள்ளது. நம்முடைய மண்ணுக்கும், மக்களுக்கும் தேவையானவற்றை பற்றி சிந்திப்பதிலும், செயல்படுவதிலும் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில், தனித்துவமாக செயல்படும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பு அணிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவு இன்று முதல் உருவாக்கப்படுகிறது. இதன் தலைவராக தாம்பரம் நாராயணன் அவர்களும் செயலாளராக வழக்கறிஞர் A.நல்ல துரை அவர்களும் நியமிக்கப்படுகிறார்கள். கழகத்தின் அனைத்து நிலை நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என டிடிவி தினகரன் அதில் கூறியுள்ளார்.