ஒரு கிளாஸ் டீ ரூ.100...! ஒரு முட்டை விலை ரூ.38..! பசியால் உயிருக்கு போராடும் குழந்தைகள்?
கடும் பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் வாழும் மக்கள் ஒவ்வொரு நாளும் உயிருக்கு போராடும் நிலை தான் ஏற்பட்டுள்ளது. வேலை இல்லாமலும், உண்ண உணவு இல்லாமலும் இந்தியாவிற்கு அகதிகளாக வர தொடங்கியுள்ளனர்.
கொரோனாவால் வருவாய் பாதிப்பு
இலங்கை கடுமையான வருவாய் இழப்பை சந்தித்து வருவதால் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் விண்ணை முட்டும் அளவுக்கு விலை உயர்ந்துவிட்டது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை முற்றிலும் குறைந்துள்ளது. இதன் காரணமாக அன்னிய செலாவணி கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்த நிலையில் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல அச்சம் அடைந்து வருவதால் முற்றிலுமாக சுற்றுலா வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு உணவு பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு
சமையல் எரிவாயு விலை 5000, சக்கரையின் விலை ரூ. 230, வெங்காயத்தின் விலை ரூ.450, ஒரு கிலோ பச்சை மிளகாய் விலை ரூ 1000, என தினந்தோறும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதன் காரணமாக இலங்கையில் ஒரு வேலை உணவு சாப்பிடுவதற்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் பெட்ரோல் விலை இதுவரை இல்லாத வகையில் வரலாற்று உச்சமாக ஒரு லிட்டர் 254 ரூபாய்க்கு விற்கப்படுகிறது, டீசல் விலையும் 180 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன் காரணமாக பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. சுற்றுலா விடுதிகளும் சுற்றுலா பயணிகள் இல்லாத கராணத்தால் வெறிச்சோடி காணப்படுகிறது.
தமிழகம் வரும் இலங்கை தமிழர்கள்
இலங்கையில் கடந்த பல வருடங்களாக நடைபெற்ற போரால் இலங்கை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஓரளவு மீண்டு வந்த நிலையில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதன் காரணமாக உணவின்றி அங்குள்ள மக்கள் தவித்து வருகின்றனர். அங்குள்ள மக்கள் டீ குடித்தே பல மாதங்கள் ஆகி விட்டதாக இலங்கை முன்னாள் எம்.பி சிவாஜி லிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஊழலும் அதிகரித்துள்ளதும் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணம் என கூறியுள்ளார். இந்த நிலையில் இலங்கையில் உண்ண உணவு , குடிக்க பால் கிடைக்காத நிலையில் இலங்கை தமிழர்கள் இந்தியாவை நோக்கி வர தொடங்கியுள்ளனர். இந்தநிலையில் இலங்கையில் இருந்து 6 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர். படகு மூலம் வந்த அவர்கள், ராமநாதபுரம் மாவட்டம் அரிச்சல் முனை அருகே இந்திய பகுதியில் இறக்கி விடப்பட்டுள்ளனர். 4 மாத கை குழந்தை உள்ளிட்ட 6 பேருடன் வந்தவர்களை கடலோர காவல் படையினர் மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது தங்களுக்கு அங்கு உண்ண உணவு கிடைக்கவில்லையென்றும் பஞ்சம் அதிகிரத்துள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் வேலையும் இல்லாத நிலையில் குழந்தைகளுக்கு உணவு கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு
இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு இலங்கை அரசு அழைப்பு விடுத்துள்ளது. பொருளாதார நெருக்கடியை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் இலங்கை தமிழர்கள், தமிழகத்தை நோக்கி அகதிகளாக வரும் நிலை வரும் நாட்களில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.