அதிமுக திரும்பவும் ஆட்சிக்கு வர 6 இலவச சிலிண்டரும், 1500 ரூபாயும் போதும்... தெறிக்கவிடும் செல்லூர் ராஜூ..!
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ள ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர் திட்டமும், இல்லத்தரசிகளுக்கு 1500 ரூபாய் திட்டமும் போதும் தமிழக அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளராக அமைச்சர் செல்லூர் ராஜூ களமிறங்கியுள்ளார். அந்தத் தொகுதிக்குட்பட்ட ஜெய்ஹிந்த்புரத்தில் தேர்தல் அலுவலகத்தை செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், “அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ள ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர் திட்டமும், இல்லத்தரசிகளுக்கு 1500 ரூபாய் திட்டமும் போதும். தவிர, கூட்டுறவு வங்கி நகைக் கடன், மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடியையும் முதல்வர் அறிவித்துள்ளார். இப்படிச் சொல்வதால் என்னைப்பற்றி மீம்ஸ்கள் போடுவார்கள். ஆனால், அதைப்பற்றியெல்லாம் எனக்குக் கவலையில்லை. அதிமுக மீண்டும் ஆட்சி அமைப்பது மட்டும் உறுதி” என்று செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “திமுக அறிவித்த திட்டங்கள் எதையுமே நிறைவேற்றியதாக வரலாறு கிடையாது. இந்த முறையும் நிறைவேற்ற முடியாத திட்டங்களையெல்லாம் அறிவித்துள்ளார்கள். ஜெயலலிதா மறைவுக்குக் காரணமே திமுக கொடுத்து நெருக்கடிதான் காரணம். பொய் வழக்கை உண்மையான வழக்காக மாற்றி அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தினர். அந்த மன அழுத்தம்தான் ஜெயலலிதா மறைவுக்குக் காரணம். தேர்தலுக்காக பெண்களின் ஓட்டுகளைப் பெற இதுபோன்ற பொய் நாடகத்தை தேர்தல் அறிக்கையாக தெரிவித்துள்ளார்கள்” என்று செல்லூர் ராஜூ தெரிவித்தார்.