தமிழகத்தில் மேலும் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்.. தலைமைச் செயலாளர் அதிரடி உத்தரவு.
தமிழகத்தில் மேலும் 5 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடம் மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மேலும் 5 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடம் மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அரசின் வேகத்துக்கு ஏற்ப அதிகாரிகளும் அரசு இயந்திரமும் செயல்பட வேண்டும் என்பதால் முக்கிய தலைமைப் பொறுப்பில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
சுகாதாரத்துறை செயலாளர், தமிழக காவல் துறை டிஜிபி பதவிகளைத் தவிற மற்ற எல்லாத்துறைகளிலும் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வரிசையில், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்த சிவதாஸ் மீனா ஐஏஎஸ், தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். உயர்கல்வித் துறையின் முதன்மைச் செயலாளராக இருந்த தீரஜ் குமார் ஐஏஎஸ், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் முதன்மை செயலாளராக இருந்த கார்த்திகேயன் ஐஏஎஸ், உயர் கல்வித் துறையின் முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். போக்குவரத்து துறையின் ஆணையராக இருந்த ஜவகர் ஐஏஎஸ் கால்நடை பால் மற்றும் மீன்வளத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த ஹர்மேந்திர சிங், சர்க்கரைத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.