கடலூரில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கடலூரில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த அருங்குணம் குச்சிபாளையம் பகுதியில் கெடிலம் ஆறு உள்ளது. இதில் இன்று அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூட்டமாக குளிக்க சென்றுள்ளனர். அவர்களுடன் சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள் என 8 பேர் குளிக்க சென்றுள்ளனர். இதில் 7 பேர் மட்டும் கெடிலம் ஆற்றில் இறங்கி குளித்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்களில் சிலர் எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு நீந்தி சென்றுள்ளனர். ஆனால் மீண்டும் கரைக்கு திரும்ப முடியாமல் அவர்கள் தத்தளித்தபடி அலறி கூச்சலிட்டனர். இதை கண்டதும் கரையில் இருந்த மற்றவர்கள் அதிர்ச்சி அடைந்து அப்பகுதி மக்களிடம் ஓடி சென்று உதவிக்கு அழைத்தனர். இதை கேட்டு துடித்துப்போன மக்கள் ஓடி வந்து நீரில் மூழ்கிய 7 பேரையும் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனாலும் சிகிச்சை பலனின்றி சுமந்தா, பிரியா, நவநீதா ஆகிய மூன்று இளம் பெண்கள் மற்றும் சங்கீதா, மோனிஷா, திவ்யதர்ஷினி, பிரியதர்ஷினி ஆகிய 4 சிறுமிகள் என மொத்தம் 7 பேரும் உயிரிழந்தனர். போலீஸ் விசாரணையில் கெடிலம் ஆற்றில் அதிகளவு மணல் எடுக்கப்பட்டதால் ஏற்பட்ட ஆழமான பள்ளத்தில் இவர்கள் சிக்கியதால் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் குறித்து நடுவீரப்பட்டு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நேரத்தில் சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள் என 7 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கடலூர் கெடிலம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கீழ் அருங்குணம் கிராமத்தில் உள்ள கெடிலம் ஆற்றங்கரையில் இன்று 12.45 மணியளவில் குளிக்கச் சென்ற சங்கவி, பிரியா, மோனிஷா, நவநீதம், சுமிதா, காவியா (எ) திவ்யதர்ஷிணி, பிரியதர்ஷிணி ஆகிய 7 பேர் குளிக்கும் இடத்தில் அதிக அளவில் பள்ளம் இருந்ததால், அந்தப் பள்ளப் பகுதியில் உள்ள ஆற்று மணலில் சிக்கி எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோரில் ஐந்து பேர் குச்சிப்பாளையம் கிராமத்தையும், இருவர் அயன் குறிஞ்சிப்பாடி கிராமத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த துயர சம்பவத்தைக் கேள்வியுற்று, மிகவும் வேதனை அடைந்தேன். உயிரழந்தவர்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விபத்தில் உயிரிழந்த ஏழுபேரின் குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
