நான் வெற்றி பெற்றால் ஆண்டுக்கு 300 மாணவர்களுக்கு எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் இலவச கல்வி …. பாரிவேந்தர் அதிரடி அறிவிப்பு !!
பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர், தான் வெற்றி பெற்றால் ஒவ்வொரு ஆண்டும் இந்த தொகுதியைச் சேர்ந்த 300 மாணவ – மாணவிகளுக்கு எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் இலவச கல்வி வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி கட்சி சார்பில் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதையடுத்து அந்தத் தொகுதி முழுவதும் பாரிவேந்தர் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே முதுவத்தூர் ஊராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாரிவேந்தர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது வாக்காளர்களிடம் பேசிய, பாரி வேந்தர் , பெரம்பலூர் தொகுதியில் தான் வெற்றி பெற்றால் தனது எஸ்.ஆர்.எம். குழுமம் சார்பில், 6 தொகுதிகளில் உள்ள ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்குவேன் என்று உறுதி அளித்தார். ஒவ்வொரு ஆண்டும் 300 மாணவ-மாணவிகளை தேர்ந்தெடுத்து இலவசமாக கல்வி வழங்குவதாக கூறினார்.
மேலும் ஆண்டுக்கு 300 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க உள்ளதாகவும், விவசாயிகளுக்கென தனி அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி அதில் அவர்களுக்கு வேளாண்மை தொடர்பான ஆலோசனைகள் வழங்க உள்ளதாகவும் பாரி வேந்தர் தெரிவித்தார்.