ஒன்றரை வருடத்தில் முந்நூறு கோடி விழுங்கிய ஆர்.கே.நகர்: தலை சுற்ற வைக்கும் தேர்தல் தகிடுதத்த செலவுகள்.
நினைத்தாலே தலை சுற்றுகிறது. காரணம்?...கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் ஆர்.கே.நகரில் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களுக்காக கொட்டப்பட்ட தொகையின் மொத்த மதிப்பு முந்நூறு கோடியை தொடும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
அதாவது 2016 -ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் இங்கே ஜெயலலிதா போட்டியிட்டார். அப்போது ஓட்டுக்கு காசு கொடுக்கவில்லை. ஆனால் பிரசாரம், புடவை, வேட்டி, சாப்பாடு, கட்சியினர் தங்கிய செலவு என்று 25 கோடியை தொட்டதாம். எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.வின் சிம்லா முத்துச்சோழன் 5 கோடி வரை செலவிட்டதாக தகவல்.
ஜெயலலிதா மறைந்த பின் அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலின் போது தினகரன் தலைமையிலான எடப்பாடி தரப்பும், மதுசூதனனை வேட்பாளராக கொண்ட பன்னீர்செல்வம் தரப்பு, மருது கணேஷை வேட்பாளராக கொண்ட தி.மு.க. என மூன்று தரப்புகள் மோதின. இதில் ஓட்டுக்கு 4 ஆயிரம் என சுமார் நூறு இருபது கோடி வரை கொட்டப்பட்டதாம். இதில் தி.மு.க.வின் பங்கு இருபது கோடி என்கிறார்கள். ஆனால் பன்னீர் அணி பணத்தை இறக்காததால் மீதி நூறுகோடியும் யார் பணம் என்பதை சொல்லி தெரிய வேண்டிய அவசியமில்லை. ஆனால் தேர்தல் ரத்தானது.
நீண்ட இடைவெளிக்கு பின் இந்த முறை நடந்த தேர்தலில் தி.மு.க. பணம் தரவேயில்லை என்கிறார்கள். ஆனால் ஓட்டுக்கு 6 ஆயிரம் எனும் அளவில் அ.தி.மு.க. மட்டும் சுமார் நூற்று இருபது கோடி ரூபாயை செலவு செய்திருக்கும் என்கிறார்கள். சுயேட்சை தினகரனோ முப்பது கோடி ரூபாய் வரை செலவு செய்திருப்பாராம்.
ஆக ஒன்றரை வருடங்களில் ஆர்.கே.நகரில் இரண்டு பெரிய கழகங்களும் இணைந்து சுமார் முந்நூறு கோடியை கொட்டியிருக்கிறார்கள் என்கிறார்கள். இதில் அ.தி.மு.க. மற்றும் தினகரன் இணைந்த தரப்பு மட்டும் 275 கோடி ரூபாயை கொட்டியிருக்கிறது.
இவ்வளவு பணம் கொட்டப்பட்டும் ஆர்.கே.நகரின் மக்களின் அடிப்படை உள்ளிட்ட அத்தனை வசதிகளும் சீர் செய்யப்பட்டிருக்கிறதா? என்றால் பதில்....
‘நத்திங்’தான்.
இவ்வளவு பணத்தை கொட்டி மக்கள் நல திட்டங்களை முறையாக செலவு செய்திருந்தால் ஆர்.கே.நகர் குட்டி சிங்கப்பூராக மாறியிருக்க வேண்டும்!
செய்தார்களா? அதை செய்தார்களா?