தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது 3 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

கடந்த 18 ஆம் தேதி சட்டசபையில் புதிதாக பதவி ஏற்ற எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து சபாநாயகர் சட்டசபை காவலர்கள் மூலம் திமுகவினரை ஒட்டுமொத்தமாக வெளியேற்றினார். இதில் திமுகவினர் கடுமையாக தாக்கப்பட்டதாகவும் சபாநாயகர் ஒருதலைப்பட்சமான முடிவை மேற்கொள்கிறார் எனவும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கிழிந்த சட்டையோடு ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து புகார் அளித்தார்.

இந்நிலையில் சட்டசபையில் நடந்த நிகழ்வுகளை கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதன்படி, சென்னை வள்ளலார் நகரில் நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:

மக்களை ஏமாற்றி சொத்து சேர்த்ததால் சிறைக்கு போனவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

தற்போது முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி மீது 3 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது.

அதிக குற்றம் செய்தவருக்கே அதிமுகவில் பதவி ஏற்பதற்கு தகுதியானவர்கள் என்ற நிலை உருவாகியுள்ளது.

அதிமுகவினரிடம் இருந்து நல்ல விஷயங்களை எதிர்பார்ப்பது முட்டாள் தனம்.

இவ்வாறு பேசினார்.