அடிதூள்.. மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன. இந்திய விமானப்படையில் பலம் பன்மடங்கு உயர்வு.
பிரான்ஸ் நாட்டிலிருந்து 3வது கட்டமாக 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்து சேர்ந்தன. எந்த இடத்திலும் இடைநிற்காமல் சுமார் 7 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணித்து ஜாம்நகர் விமானப்படைத் தளத்தில் மூன்று ரஃபேல் போர் விமானங்களும் தரை இறங்கின.
பிரான்ஸ் நாட்டிலிருந்து 3வது கட்டமாக 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்து சேர்ந்தன. எந்த இடத்திலும் இடைநிற்காமல் சுமார் 7 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணித்து ஜாம்நகர் விமானப்படைத் தளத்தில் மூன்று ரஃபேல் போர் விமானங்களும் தரை இறங்கின. இந்தியாவுக்கு எல்லையில் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் ரஃபேல் விமானங்களின் வருகை இந்திய ராணுவத்திற்கு வலுச்சேர்க்கும் என விமானப் படை தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ரஃபேல் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
பிரான்சிடம் இருந்து சுமார் 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த 36 ரஃபேல் ஜெட் விமானங்களில் 30 போர் விமானங்கள் மற்றும் 6 பயிற்சி விமானங்கள் அடங்கும். முதல்கட்டமாக பிரான்ஸ் நாட்டில் இருந்து அதிநவீன ஐந்து ரஃபேல் போர் விமானங்கள் கடந்த ஆண்டு ஜூலை 29-ஆம் தேதி இந்தியா வந்தடைந்தது. அந்த விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளன. இந்திய சீனா இடையே கிழக்கு லடாக் பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு அந்த விமானங்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
அதேபோல் கடந்த நவம்பர் 3ஆம் தேதி 2வது கட்டமாக 3 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன. முதலில் வந்த 5 ரஃபேல் விமானங்கள் அம்பாலா விமானப்படை தளத்திலும், இரண்டாவதாக வந்த மூன்று ரஃபேல் விமானங்கள் அஸிமாரா விமான தளத்திலும் தரையிறங்கின. இந்நிலையில் மூன்றாவது கட்டமாக மேலும் மூன்று ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள இந்திய விமானப்படை, பிரான்சில் இருந்து 7000 கிலோமீட்டர் இடைவெளி தூரத்தை இடைவெளியை பயணித்து மூன்று ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவின் ஜாம்நகர் விமான தளத்தை வந்தடைந்தது.
பிரான்சின் இஸ்டிரஸ் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட விமானங்கள் விண்ணில் பறந்தபடியே இடையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் எரிபொருள் நிரப்பிக்கொண்டு பின்னர் தொடர்ச்சியாக பயணித்து ஜாம்நகர் வந்தடைந்தது எனவும், எரிபொருள் நிரப்ப உதவிய ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் எனவும் விமானப்படையின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு எல்லையில் சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், ரஃபேல் விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக படையில் இணைந்து வருவது நமது விமானப் படையின் பலத்தை பன்மடங்கு உயர்த்தும், இதன் மூலம் எந்த ஒரு நெருக்கடியையும் இந்திய ராணுவத்தால் சமாளிக்க முடியும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.