கொமதேகவை வழிக்கு கொண்டுவந்த திமுக... 3 தொகுதிகளை ஒதுக்கி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைத்த ஸ்டாலின்.!
இழுபறியில் இருந்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, திமுக கூட்டணியில் 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் எல்லா கட்சிகளுடனும் திமுக தொகுதி உடன்பாடு கண்ட நிலையில், கொமதேகவுடன் மட்டும் இழுபறி நீடித்து வந்தது. கொமதேக உடன் நடைபற்ற இரண்டுக்கட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படாததால், அக்கட்சி அதிமுக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு கொமதேகவுக்கு திமுக அழைப்பு விடுத்தது. இதை ஏற்று கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சுமுக முடிவு எட்டப்பட்டது.
இதனையடுத்து திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 3 தொகுதிகளில் போட்டியிட தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. இதன்பிறகு கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கொமதேக-வுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 3 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுகிறோம். வெற்றி கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது, தேர்தலில் திமுக வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும்” என்று ஈஸ்வரன் தெரிவித்தார்.