1,80,000 கோடி ரூபாய் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி, தி.மு.க. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜா, ஆகியோர் இன்று டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஆ.ராஜா முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மத்திய அமைச்சராக இருந்தபோது, 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ஒரு லட்சத்து80 ஆயிரம் கோடி ரூபாய் நாட்டுக்கு இழப்பு ஏற்பட்டது. இந்த இமாலய ஊழல் குறித்து உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி, சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த வழக்கில் இறுதிகட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே சி.பி.ஐ. தரப்பிலான இறுதிகட்ட வாதம் நிறைவடைந்துவிட்டது.

சி.பி.ஐ. தனது வாதத்தில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆ.ராஜா, கருணாநிதி மகள் கனிமொழி உள்ளிட்டோர் ஊழலில் ஈடுபட்டது தொடர்பாகவும், கலைஞர் டி.வி.க்கு 214 கோடி ரூபாய் சட்டவிரோதமாக கைமாறியது தொடர்பாகவும் தெள்ளத்தெளிவாக ஆதாரங்களை எடுத்து வைத்தது.

இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றும், சி.பி.ஐ. தரப்பில் வலியுறுத்தப்பட்டது. மொத்தம் 154 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றுள்ளது.

இதைத்தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்டுள்ள கனிமொழி எம்.பி., மற்றும் தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆ.ராஜா ஆகியோர் இன்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர்.