253 பேருக்கு மட்டும் தான் அனுமதி ! அத்திவரதரை அனந்தசரஸ் குளத்தில் வைக்க தீவிர ஏற்பாடுகள் !!
காஞ்சிபுரம்: அத்திவரதரை அனந்தசரஸ் குளத்தில் இறக்கும் வைபவம் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் பங்கேற்க 253 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
40 ஆண்டுகளுக்கு பிறகு அத்தி வரதர் கடந்த ஜுலை 1 ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 48 ஆவது நாளான இன்று அத்தி வரதர் மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் மீண்டும் வைக்கப்பட உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த வைபவத்தில் கோயில் பட்டாச்சாரியர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்தினர் என மொத்தம் 253 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 253 பேருக்கும் இன்று இரவு மட்டும் செல்லத்தக்க வகையில் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் அத்திவரதரை குளத்தில் இறக்கும் நிகழ்வில் காவல்துறையினர் 1,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் அத்திவரதரை குளத்தில் வைக்கும் போது வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுக்க அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
அத்திவரதர் வைக்கப்படும் அனந்த சரஸ் குளத்துக்கு ஒரு மாதம் வரை போலீஸ் பாதுகாப்பு போடப்படும். கோயில் வளாகத்தை சுற்றிலும் ஏற்கனவே 46 கேமராக்கள் உள்ளன. தற்போது குளத்தை சுற்றிலும் 10 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இன்னும் 3 நாட்களில் கிழக்கு கோபுரம் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்தார்.