தமிழக அரசியல் களத்தை தெறிக்கவிட்ட சசிகலா... 23 மணி நேர பயணம்.. டயர்ட் ஆகாமல் கெத்து காட்டி அசத்தல்..!
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து தமிழகம் திரும்பிய சசிகலாவுக்கு கொடுத்த அமர்க்கள வரவேற்பு, தமிழக அரசியல் களத்தையே தெறிக்கவிட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து தமிழகம் திரும்பிய சசிகலாவுக்கு கொடுத்த அமர்க்கள வரவேற்பு, தமிழக அரசியல் களத்தையே தெறிக்கவிட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனைக் காலம் முடிந்து சிறையிலிருந்து விடுதலையான சசிகலா, பெங்களூருவில் உள்ள இல்லத்தில் ஒரு வார காலம் ஓய்வெடுத்தார். இதைத்தொடர்ந்து, நேற்று காலை 7.45 மணிக்கு அதிமுக கொடியுடன் சென்னை நோக்கி காரில் புறப்பட்டார். இரு மாநில எல்லையான ஜூஜூவாடி வழியே தொண்டர்களின் வரவேற்புக்கிடையே சசிகலா தமிழகத்தை அடைந்தார். பின்னர், ஆளுங்கட்சியின் மறைமுக எதிர்ப்புகளை எல்லாம் தாண்டி ஓசூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பிரம்மாண்டமாக வழிநெடுக மேளதாளங்கள் முழங்க, பூத்தூவி சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, நள்ளிரவு முழுவதும் பல்வேறு தடபுடலான வரவேற்புகளை கடந்து 23 மணி நேர பயணத்திற்குப் பின்னர் அதிகாலை 3.30 மணியளவில் சசிகலா சென்னை வந்தடைந்தார். பின்னர், சென்னை ராமாபுரத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடம், ஜானகி நினைவிடத்தில் சசிகலா மற்றும் டிடிவி.தினகரன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சசிகலா, அவரது வாரிசுகளிடம் நலம் விசாரித்தார்.
அங்கிருந்து புறப்பட்டு சென்னை தி. நகரில் இருக்கும் தனது இல்லத்துக்கு வருவதற்கு இரண்டு மணி நேரம் ஆனது. சைதாப்பேட்டையில் அதிரடியான வரவேற்புக்குப் பின் மெல்ல மெல்ல தி.நகரில் இருக்கும் தனது இல்லத்துக்கு சசிகலா வந்தபோது இன்று காலை 6.25 மேளதாளம், நாதஸ்வரங்கள் முழங்க, பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அவருக்கு வரவேற்பு அளித்தனர். வீட்டுக்குள் நுழைந்த சசிகலாவுக்குத் திருஷ்டி சுற்றப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. சிறை தண்டனை முடிந்து தமிழகம் திரும்பிய சசிகலாவுக்கு விடிய விடிய கொடுத்த அமர்க்கள வரவேற்பு ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியை அதிர்ச்சியடைய செய்துள்ளது.