தஞ்சை தேர்பவனி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தஞ்சை தேர்பவனி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள களிமேடு கிராமத்தில் அப்பர் மடத்துக்கான கோயில் உள்ளது. ஆண்டுதோறும் அப்பர் பிறந்த நட்சத்திரமான சதய நட்சத்திர தினத்தில் இங்கே விமர்சையாக சித்திரைத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று காலை திருவிழா தொடங்கியிருக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. அப்பர் மடத்துக்குச் செல்வதற்காகச் சாலையின் வளைவில் தேரை இழுக்கும் போது அருகே இருந்த பள்ளத்தில் தேரின் சக்கரம் இறங்கியுள்ளது. தேர் நின்ற இடத்துக்கு மேற் பகுதியில் உயர்மின் அழுத்த கம்பி சென்றுள்ளது. தேர் சாய்ந்த நிலையில் அதன் மேல் பகுதி உயர் மின் அழுத்த மின் கம்பியில் உரசியது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 14 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதை அடுத்து தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 15 பேர்களுக்கு தலா 25,000 ரூபாயும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின் விபத்து ஏற்பட்டதால், 11 பேர் பலியான நிலையில், 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், இம்மின் விபத்தில் இறந்த 11 குடும்பங்களுக்கு தலா 2 இலட்ச ரூபாய் வீதமும்; காயமடைந்த 14 பேர்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 25 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.