தமிழகத்தில் 1 - 8 ஆம் வகுப்பு பள்ளிகள் திறப்பை நவம்பர் 8-க்கு தள்ளி வைக்கணும்... ஜி.கே.வாசன் சொல்லும் காரணம்.!
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பை நவம்பர் 1-ஆம் தேதிக்குப் பதில் நவம்பர் 8-ஆம் தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
கிருஷ்ணகிரியில் ஜி.கே.வாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது. தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்பு முன்பும், பின்பும் பொதுஇடங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே, கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவுப்படுத்த வேண்டும். இந்த காலக் கட்டத்தில் மாணவர்கள் வெளியே சென்றால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பை நவம்பர் 1-ஆம் தேதிக்குப் பதில் நவம்பர் 8-ஆம் தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும்.
சட்டப்பேரவை தேர்தல் நேரத்தில் திமுக பல வாக்குறுதிகளை அறிவித்தது. அதில் பெண்களுக்கு 1000 ரூபாய், நெல்லுக்கு ஆதார விலை, மாதந்தோறும் மின் கணக்கீடு, நெசவாளர்களுக்கு தனியார் வங்கி ஆகிய வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் கடன் தள்ளுபடி என்ற தேர்தல் வாக்குறுதி மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக உள்ளது. மதுக்கடைகளுக்கு விடுமுறையே இல்லாத நிலையில், வழிபாட்டுதலங்களுக்கு மட்டும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தடை விதிக்கப்படுகிறது. அனைத்து நாட்களும் வழிபாட்டு தலங்களை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று ஜி.கே.வாசன் தெரிவித்தார்.