18 mla case who is the third judge

டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட 18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்த வழக்கில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை அளித்துள்ளதால், மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த மூன்றாவது நீதிபதி யார் என்பதை, உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி குலுவாடி ரமேஷ் இன்று மாலை அறிவிப்பார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்றும், எனவே அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 பேர் கடந்த ஆண்டு ஆளுநராக இருந்த வித்யா சாகர் ராவிடம் புகார் கொடுத்தனர். இதையடுத்து அந்த 18 பேரையும் சபாநாயகர் தனபால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. 

அவர்கள் இன்று தீர்ப்பு வழங்கினர். அதில் இருவரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் வழக்கு மற்றொரு நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது நீதிபதி விரைவில் நியமனம் செய்யப்படுவார் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தகுதிநீக்க வழக்கை விசாரிக்கும் 3-வது நீதிபதி யார்? என்பதை நீதிபதி குலுவாடி ரமேஷ் அறிவிக்கிறார். தலைமை நீதிபதிக்கு அடுத்த இடத்தில் உள்ள மூத்த நீதிபதி குலுவாடி ரமேஷ் 3 ஆவது நீதிபதியை அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது