முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பெங்களூரு தனி நீதிமன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குன்ஹா ஜெயலலிதா உள்பட 4 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து 4 பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி குமாரசாமி, மனுதாரர்கள் பேரையும் விடுதலை செய்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து தி.மு.க. மற்றும் கர்நாடக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பினாகி சந்திரகோஷ் மற்றும் அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், விசாரித்தது.

அதில், நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை உறுதி செய்யும் வகையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை மற்றும் தலா ரூ.10 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டனர். 

இதையொட்டி சசிகலா தனக்கு உடல்நிலை சரியில்லை எனவும் , நீதிமன்றத்தில் சரண் அடைய 4 வாரங்கள் கால அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அவகாசம் தரமுடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டனர்.

இதை தொடர்ந்து, சசிகலா பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் சரணடைய புறப்பட்டு சென்றார். இதைதொடர்ந்து, பெங்களூர் பரப்பன அக்ராஹரம் பகுதியில் சுமார் 3 கி.மீ. தூரத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.