1400 ஏக்கர் சொத்தை ஆட்டையைப்போட்ட கல்வித் தந்தை.? திருநெல்வேலியில் பகீர் குற்றச்சாட்டு..
1,400 ஏக்கர் நிலங்களை கிருஷ்ணப்பிள்ளை மற்றும் அவரது மகன் ஐயப்பா என்கிற கார்த்திக் ஆகியோர் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், லெவிஞ்சிபுரத்தில் உள்ள கேப் தொழில்நுட்ப கல்லூரியின் தலைவர் கிருஷ்ணப்பிள்ளை. முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா கட்டுப்பாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுமார் 1,400 ஏக்கர் நிலங்களை கிருஷ்ணப்பிள்ளை மற்றும் அவரது மகன் ஐயப்பா என்கிற கார்த்திக் ஆகியோர் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நில மோசடி குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி காவல்கிணறு வளன் என்பவர் மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில், ’’பி.ஏ.சி.எல். என்ற தனியார் நிறுவனம் இந்தியா முழுவதும் குறைந்த விலையில் நிலங்கள் விற்பனை செய்வதாக சொல்லி பல்லாயிரக்கணக்கான நபர்களிடம் சுமார் 49 ஆயிரம் கோடி நிதி வசூல் செய்து இந்தியா முழுவதும் சுமார் 11,000 ஏக்கர் நிலங்களை வாங்கினர். இதில், சுமார் 3,000 ஏக்கர் நிலங்கள் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் வாங்கப்பட்டுள்ளது.
ஆனால், அந்த நிறுவனத்தில் பணம் செலுத்திய சந்தாதாரர்களுக்கு உறுதி அளித்தபடி நிலங்கள் தராததாலும் டெபாசிட் செய்த பணத்தையும் திருப்பி தராததாலும் சிபிஐ வழக்குப்பதிவு செய்து, அந்த நிறுவனத்திற்கு சொந்தமான அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்தது.
அதனடிப்படையில், அந்நிறுவனத்தில் பணத்தை செலுத்தியவர்கள் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2015ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் கடந்த 02.02.2016 அன்று பிறப்பித்த இடைக்கால உத்தரவில் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் கமிட்டி ஒன்றை அமைத்து மேற்சொன்ன பி.ஏ.சி.எல். நிறுவனம் இந்தியா முழுவதும் வாங்கிய நிலங்கள் மற்றும் அதன் சொத்துக்களை அந்த கமிட்டியின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, அந்த நிலங்களை விற்பனை செய்து டெபாசிட்தாரர்களுக்கு பணத்தை திருப்பி தருமாறு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்சொன்ன நிறுவனத்திற்கு சொந்தமான 1,400 ஏக்கர் நிலங்கள் மும்பையை சேர்ந்த எஸ்.பி. இன்ப்ராஸ்ட்ரக்சர்ஸ், அரினா சோலார் கம்பெனி என்ற நிறுவனங்களுக்கு சோலார் பேனல்கள் அமைப்பதற்கு தேவைப்படுவதாகவும், அந்நிறுவனம் கிருஷ்ணப்பிள்ளை மற்றும் அவரது மகன் ஐயப்பா என்கிற கார்த்திக் இயக்குனராக உள்ள கிருஷ்வா பவர் பிரைவேட் லிட் என்ற நிறுவனத்தை நாடியுள்ளனர்.
அதனை நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.லோதா கமிட்டி கட்டுப்பாட்டில் உள்ள பி.ஏ.சி.எல். நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்களை கிருஷ்ணப்பிள்ளை மற்றும் அவரது மகன் ஐயப்பா என்கிற கார்த்திக் ஆகியோர் ஆள்மாறாட்டம் செய்தும், அரசு ஆவணங்கள் மற்றும் முத்திரைகளை போலியாக தயார் செய்தும், சார்-பதிவாளர்களுக்கு லஞ்சம் கொடுத்து மோசடியாக பத்திரப்பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு முன்பும் இதேபோல் பல மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக இவர்கள் மீது காவல் துறையினரால் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டு வழக்கு இன்றளவும் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் 06.01.2021 அன்று தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் மேற்கண்ட மோசடிகளைப் பற்றி விசாரணை செய்ய மாநில காவல்துறைக்கும் அதிகாரம் உள்ளது என்றும் பி.ஏ.சி.எல் நிறுவனத்திற்கு சொந்தமான கையகப்படுத்தப்பட்ட நிலங்களை லோதா கமிட்டியின் தடையின்மை சான்றிதழ் இல்லாமல் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என தமிழக அரசின் வருவாய்த்துறை முதன்மை செயலாளருக்கு கடந்த 14.05.2018 அன்று கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு, இறுதி விசாரணைக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.