சென்னையில் 1381 கிலோ தங்கம் பறிமுதல் ! பறக்கும் படையினர் அதிரடி !!
சென்னை ஆவடியை அடுத்த வேப்பம்பட்டு டோல்கேட் வழியாக லாரியில் கொண்டு செல்லப்பட்ட 1381 கிலோ தங்கத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
வேலூர் தவிர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 39 தொகுதிகளிலும், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் நாளை வாக்குப் பதிவு நடைபெறகிறது. தேர்தலையொட்டி நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் பட்டுவாடா செய்யாமல் தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் வாகனங்களை ஆய்வு செய்து வருகின்றனர். இதே போன்று வருமான வரித்துறையினரும் பல இடங்களில் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இது வரை அதிக அளவு பணம் மற்றும் தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் சென்னை ஆவடியை அடுத்த வேப்பம்பட்டு சோதனைச் சாவடியில் லாரியில் கொண்டு செல்லப்பட்ட 1,381 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை அருகே வேப்பம்பட்டு சோதனைச் சாவடி வழியாக லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அதை மடக்கிய பறக்கும் படையினர் சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி 1381 கிலோ தங்கம் கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையிளர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த விசாரணையில் 15 பெட்டிகளில் சுவிட்சர்லாந்தில் இருந்து கொண்டு வரப்பட்ட தங்கம் அது என்றும், திருப்பதி தேவஸ்தானத்துக்கு அது கொண்டு செல்லப்படடதாகவும் தெரிய வந்தது. ஆனால் அது உண்மைதானா ? என்பது குறித்து விசாரணை நடத்துப்பட்டு வருகிறது.