13 persons acquitted from rajapakse relative thirukumaran attacked case

ராமேஸ்வரம் கோயிலில் ராஜபட்ச உறவினரைத் தாக்கிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 13 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட 13 பேரை விடுதலை செய்யும்படி ராமேஸ்வரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

முன்னதாக, கடந்த 2012 ஆம் வருடம் ஜனவரி மாதத்தில், ராமேஸ்வரத்திற்கு தரிசனம் செய்ய வந்தார் அப்போதைய இலங்கை அதிபர் ராஜபட்சவின் மைத்துனர் திருக்குமரன் நடேசன். ராஜபட்சயின் தங்கை கணவரான இவர் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர். இவர் குடும்பத்துடன் ராமேஸ்வரம் வந்து சாமி தரிசனம் செய்ய வந்தார். பூஜை முடிந்து கடற்கரையில் இருந்து புரோஹிதரின் வீட்டுக்குச் செல்ல முயன்றார். அப்போது, ம.தி.மு.க., நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் புரோகிதரின் வீட்டிற்கு முன்பு கூடி, ராஜபட்சவிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பி நடேசனுக்கு கருப்பு கொடி காட்டினர். 

வீட்டிலிருந்து வெளியே வந்த நடேசன் மீது செருப்புகளை வீசித் தாக்கினர். இதில் போலீசாருக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போலீசார் ம.தி.மு.க., நாம் தமிழர் நிர்வாகிகளை அப்புறப்படுத்தி நடேசனை காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதில் நடேசனுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இதை அடுத்து ம.தி.மு.க., மாநில இளைஞரணி துணைச் செயலாளர் கராத்தே பழனிச்சாமி, நாம் தமிழர் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கண்.இளங்கோ, நம்புகுமார், வெள்ளைச்சாமி, பாலு, சின்னத்தம்பி, திருமுருகன் என சிலர் மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் இருந்து தற்போது, 13 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.