What is the connection between hunger and anger

பசி வந்தால் பத்தும் பறந்து போகும்! என்ற பழமொழி, தமிழர்களிடையே நிலவி வருகிறது. அந்த பத்து விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து தமிழ்ப்பாடல்
ஒன்று விளக்குகிறது. அதில் மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை, காமம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு
மனிதனுக்கு பசி வரும்போது அவனது குணநலம் மாறும் என்பதை அப்பாடல் குறிப்பிடுகிறது. இந்த பாடலை ஔவையார் எழுதியுள்ளார். அந்த பாடல்,

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை – தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்.

பசி ஏற்படும்போதும் ஏற்படும் குணநலன் குறித்த ஆராய்ச்சி அமெரிக்காவில் நடத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வட கரோலினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜெனிபர் மக்கோர்மாக் மற்றும் கிறிஸ்டன் லிந்துகுஸ்ட் இணைந்து பசி மற்றும் அது தொடர்பான உணர்ச்சிகளை பற்றி ஆராய்ச்சி நடத்தினர்.

அதற்காக 200 பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களை ஆய்வுக்கு உட்படுத்தினர். ஆய்வு நடத்துவதற்கு முன்பாக மாணவர்கள் அனைவரும் சாப்பிடாமல் இருக்குமாறு ஆராய்ச்சியாளர்கள் கேட்டுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஆய்வின்போது அந்த மாணவர்களுக்கு கடினமான வேலைகள் கொடுத்து பரிசோதனை செய்யப்பட்டது.

தொடர்ந்து, அவர்களுக்கு கேள்வித்தாள் ஒன்று கொடுக்கப்பட்டு, விடைகளை எழுதும்படியும் அவர்கள் கூறியுள்ளனர். மாணவர்கள் பசியில் இருந்தபோதிலும், சிலர் தங்களின் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விடைகளை நிரப்பியதாக ஆராய்ச்சி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த ஆய்வின் முடிவில், பசி மிகுந்த நபர்கள் மன அழுத்தம் மற்றும் வெறுப்புணர்ச்சிகளை வெளிப்படுத்தியதாக தெரியவந்துள்ளது.

உடலின் பசி, சோர்வு மற்றும் ஆரோக்கியமே நம் வாழ்க்கையில் நாம் வெளிப்படுத்தும் உணர்வுகள், நடத்தைகள் மற்றும் அனுபவங்களை வடிவமைக்கின்றன என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.