இன்னும் இரண்டே மணி நேரம்... தமிழகத்தில் இந்த 6 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை..!
அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனத்தின் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தஞ்சை, நாகை, திருச்சி, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை நீலகிரி, கோயம்புத்தூர் , திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. வரும் 15ஆம் தேதி நீலகிரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும்.
வரும் 16ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று முதல் வரும் 16ஆம் தேதி வரை தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்கக் கடல், தென் மேற்கு, மத்திய மேற்கு வங்க கடல், தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் ஆகிய பகுதிகளில் காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் இப்பகுதியில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.