குட்நியூஸ்; சிவகங்கை,ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 6 பேர் கொரோனாவில் இருந்து விடுதலை.! மகிழ்ச்சியில் ஆட்சியர்
சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரிமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தனர்.இவர்களில் 6பேர் குணமடைந்துள்ளனர். அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயகாந்தன் விழிப்புணர்வு கொடுத்து வீட்டுக்கு வழியனுப்பி வைத்தார்.
தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு அதிகரித்து வருகிறது. அதில், பெரும்பாலும் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு வந்தவர்களும், அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களும்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு உள்பட 22 மாவட்டங்கள் அதிகம் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஈரோட்டில் இன்று மட்டும் 13 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 6 பேர், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தற்போது குணமடைந்துள்ளனர்.டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 46 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், திருப்பத்தூரைச் சேர்ந்த 3 பேரும், இளையான்குடி, தேவகோட்டையைச் சேர்ந்த தலா ஒருவர் என 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர்களுடன் மேலும் 6 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதோடு, ராமநாதபுரத்தைச் சேர்ந்த இருவர் உள்பட 7 பேரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில், திருப்பத்தூரைச் சேர்ந்த 3 பேர், பரமக்குடியைச் சேர்ந்த 2 பேர், தேவக்கோட்டையைச் சேர்ந்த ஒருவர் என 6 பேர் குணமடைந்துள்ளனர். சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியவர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் பொன்னாடை அணிவித்தார்.