பாலியல்  தொந்தரவுகளில் இருந்து பெண்கள் தங்களை தற்காத்து கொள்ளும் முக்கிய வழிமுறைகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பாலியல் வன்முறை இன்றைய நவீன கால சமூகத்தின் பெரும் இழிவுகளில் ஒன்று. நாகரிகம் மனிதனைப் பக்குவப்படுத்தி இருந்தாலும், பாலியல் வன்முறையில் ஈடுபடும் இயல்பு இன்னும் சிலரிடம் எஞ்சியிருக்கிறது. இதன் வெளிப்பாடே கல்வி நிலையங்களில் மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்படுவது.

தற்போதைய தொழில்நுட்பயுகத்தில், இரு பாலினருக்கு இடையேயான பாலியல் வரைமுறைகளை இணையதளமும், சமூக வலைத்தளங்களும் பெரிதும் மாற்றியமைத்துவிட்டன. கல்வியும், கைபேசிகளும் இணையும் புள்ளி, பாலியல் அத்துமீறல்களுக்கு அதிக சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தருகிறது.

சமீப காலமாகவே, பள்ளி, கல்லூரி வகுப்புகளில் சில மாணவ, மாணவிகளுக்கு மட்டும் ஆசிரியர்கள் தனிக் கவனம் கொடுப்பது இயல்பானதுதான். நன்றாகப் படிக்கும் மாணவர்களை இன்னும் மேம்படுத்துவதற்கும், பின்தங்கிய மாணவர்களைத் தேர்ச்சி பெறவைப்பதற்கும் இப்படிச் செய்வதுண்டு. ஆனால், இதே காரணங்கள் மாணவிகளுக்குப் பாதகமாகவும், ஆசிரியர்களுக்குச் சாதகமாகவும் மாறிவிடுகின்றன.

வகுப்பிலோ அதற்கு அப்பாற்பட்டோ ஒரு குறிப்பிட்ட மாணவியிடம் மட்டும் தொடர்ச்சியாக மதிப்பெண்களைக் குறைத்துவிடுவதாக மிரட்டுவது, படிப்பைத் தொடர முடியாமல் செய்து விடுவேன் என்று எச்சரிப்பதைக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதை முழுமையாகத் தவறான கண்ணோட்டத்தில் எடுத்துக்கொள்ள முடியாது என்றாலும், சம்பந்தப்பட்ட மாணவி முந்தைய சூழ்நிலைகளுடன் ஒப்பிட்டுத் தான் நிர்பந்திக்கப்படுவதைக் கண்டறிய முடியும்.

இந்தச் சூழலில், தனது படிப்புக்கும் நற்பெயருக்கும் பாதிப்பு வந்துவிடுமோ என்று பயந்து காலந்தாழ்த்துவதைவிடப் பெற்றோரிடம் கூறிவிடுவது நல்லது. பெற்றோரிடம் சொன்னால் இது தவறாக எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்கிற நம்பகத்தன்மையை உருவாக்க வேண்டியது பெற்றோரின் கடமை.

எச்சரிக்கை அறிகுறிகள்:

ஓர் ஆசிரியர் அல்லது சக மாணவன் பாலியல் சீண்டல் நோக்கத்துடன் தன்னை அணுகு கின்றாரா என்பதை ஆரம்பக் கட்டத்திலேயே அறிந்துகொள்ள முடியும்.

தேவைக்கு மீறி அடிக்கடி தனியாகப் பேசுவதற்கான அல்லது மெசேஜ் செய்வதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்துவது.

குடும்ப நபர்களைப் பற்றித் தேவைக்கு அதிகமாக விசாரிப்பது, வீட்டில் யார் இருக்கிறார்கள் என்பதை அடிக்கடி உறுதிப்படுத்திக்கொள்வது.

 தான் அனுப்பிய மெசேஜ் அல்லது அழைப்புகளை டெலிட் செய்யுமாறு சொல்வது.

மாணவியின் படிப்பு அல்லது தனித்திறமைகளை அதிகம் புகழ்ந்து பேசுவது. மாணவியின் உடைகளை, அழகை நேரடியாகவோ மறைமுகமாகவோ வர்ணிப்பது.

பலவீனங்களை வெளிப்படுத்த வேண்டாம்:

வகுப்புகளிலும், சமூக வலைத்தளங்களிலும் சில கட்டுப்பாடுகளைப் பின்பற்றத் தவறும் மாணவிகள் எளிதில் பாதிப்புக்குள்ளாகக்கூடும்.

படிப்பதற்கும், வரைமுறைக்கு உட்பட்ட பொழுது போக்குக்கும் மட்டுமே இணையதளம், செல்போன் உபயோகியுங்கள்.

சமூக வலைத்தளங்களில் தெரியாத நபர்களிடம் மெசேஜ் செய்வதைத் தவிருங்கள். தெரியாத நபர்களிடமிருந்து தேவையற்ற நேரங்களில் வரும் ‘ஹலோ’க்களை அங்கீகரிக்க வேண்டாம். திசை மாறும் பேச்சுக்கள் அல்லது மெசேஜ்க்கு முதலிலேயே முற்றுப்புள்ளி வைத்துவிடுவது நல்லது.

விருப்பம் இல்லாத சீண்டல்களுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்காமல் இருக்கும்போது, உங்களுக்கும் விருப்பம் இருக்கிறது என்று எதிர்தரப்பினர் நினைத்துக்கொண்டு இன்னும் நெருங்கி வரும் தவறான அணுகுமுறையை ஏற்படுத்தும்.

 உங்களின் தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதைத் தவிர்த்து விடுங்கள்.

நான் மனச்சோர்வில் இருக்கிறேன், தனிமையாக உணர்கிறேன், புரிந்துகொள்ள யாருமில்லை என்பது போன்ற உங்கள் மனநிலையை வெளிப்படுத்தும் வகையில் வாட்ஸ் அப் ‘ஸ்டேட்டஸ்’ வைத்து உங்கள் பலவீனங்களைப் பிறருக்கு வெளிப்படுத்த வேண்டாம்.



செய்யவேண்டியது என்ன?

ஒருவேளை ஆசிரியர்களோ, சக மாணவர்களோ அல்லது பள்ளிக்குச் செல்லும் வழியில் அடிக்கடி எதிர்ப்படும் நபரோ பாலியல்ரீதியாகச் சீண்ட முயல்வதாக ஒரு பெண் நினைத்தால், தாமதிக்காமல் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க முயல வேண்டும். ‘இனி என்னைத் தொந்தரவு செய்தால் வெளியே சொல்லிவிடுவேன்’ என்று அவர்களை எச்சரிப்பது சிலநேரம் அவர்கள் உடல் ரீதியான அத்துமீறல்களை மேற்கொள்ள வழிவகுக்கும். மாறாக நம்பிக்கைக்குரிய மற்ற பாலின ஆசிரியர்களிடமோ, பெற்றோரிடமோ சொல்லி அவர்கள் மூலமாக அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்வது நல்லது. இப்படிச் செய்வதால் நம் படிப்பு பாதிக்கப்படும் என்கிற பயமோ, அந்த நபரின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்கிற குற்றவுணர்வோ தேவையில்லை. மாறாக நாம் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதுடன், இதைப்போல் இன்னொரு பெண்ணும் பாதிப்புக்குள்ளாவதைத் தடுக்க முடியும் என்பதை மறந்துவிடக் கூடாது.

 பெற்றோர்கள் கவனத்திற்கு..

பள்ளிக்குச் செல்வதைத் தவிர்க்க விரும்பும் மாணவிகள், படிக்க விருப்பமில்லாமல் அப்படிச் செய்கிறார்கள் என்று பழியைப் போட்டுவிட வேண்டாம். பள்ளிக்கு அழைத்துச்செல்லும் ஓட்டுநர்கள் முதல் ஆசிரியர்கள், சக மாணவர்கள் வரை அனைவரின் அணுகுமுறைகளைப் பெற்றோர் அடிக்கடி விசாரித்து அறிந்துகொள்வது மாணவிகளுக்குப் பாதுகாப்பு உணர்வையும், பிரச்சினை ஏற்படும்பட்சத்தில் உடனடியாக வெளிப்படுத்தும் தைரியத்தையும் கொடுக்கும்.