கொரோனா பயத்தில் ஒரு குடும்பமே விஷமருந்தி விபரீதம்... மதுரையில் நடந்த படுபயங்கரம்..!
கோவிட்-19 மற்றும் அதன் விளைவுகள் குறித்து குடும்பத்தினர் அஞ்சியதால் அவர்கள் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவு செய்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
தமிழகத்தின் மதுரையில் கோவிட்-19 தொற்று பரவும் என்ற அச்சத்தில் 23 வயது பெண்ணும், அவரது மூன்று வயது மகனும் விஷம் அருந்தி உயிரிழந்தனர்.
இறந்த பெண்ணின் தாய் மற்றும் சகோதரர்கள் உட்பட குடும்பத்தில் உள்ள ஐந்து பேர் தொற்றுக்கு பயந்து விஷம் அருந்தியுள்ளனர். அவர்களில் மூவர் உயிர் பிழைத்த நிலையில், பெண்ணும் அவரது மூன்று வயது குழந்தையும் போலீஸாரால் சடலமாக மீட்கப்பட்டனர். தாய் லட்சுமியால் தனது கணவர் நாகராஜின் இழப்பை சமாளிக்க முடியவில்லை. தினக்கூலி தொழிலாளியான கணவர் டிசம்பர் மாதம் இயற்கை எய்தினார். நாகராஜின் மரணத்தால் குடும்பத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இறந்த ஜோதிகா கணவரை பிரிந்து தாய் லட்சுமியுடன் வசித்து வந்தார். ஜனவரி 8ம் தேதி அன்று ஜோதிகாவுக்கு கொரோனா சோதனை செய்ததாகவும், அதைத் தனது தாயிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. தொற்று நோய் பரவும் என்ற அச்சத்தில் குடும்பத்தினர் விஷம் குடித்ததாக கூறப்படுகிறது.
அக்கம்பக்கத்தினர் மறுநாள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் குடும்பத்தில் உள்ள மூன்று பேரையும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். போலீசார் வருவதற்குள் ஜோதிகாவும் அவரது மகனும் இறந்து விட்டனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிட்-19 மற்றும் அதன் விளைவுகள் குறித்து குடும்பத்தினர் அஞ்சியதால் அவர்கள் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவு செய்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர். பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் மருத்துவ உதவியை நாடுமாறும் சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இருப்பினும் கொரோனா பயத்தில் சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
சில மாதங்களுக்கு முன் கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர் பகுதியில் வசித்து வந்த ரமேஷ் மற்றும் சுவர்ணா தம்பதினர். மங்களூரில் உள்ள போலிஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வாட்ஸ் அப் மூலம் வீடியோ ஒன்றை அனுப்பி வைத்தனர். அதில் எங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் நாங்கள் தற்கொலை செய்து கொள்கிறோம் என்று அதில் குறிப்பிட்டிருந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனடியாக அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தனர். ஆனால் அவர்கள் அழைப்பை ஏற்கவில்லை என்பதால் அவர்களின் வீட்டின் முகவரியை கண்டுபிடித்து விரைந்து சம்பவ இடத்திற்கு சென்றனர்.
ஆனால் அந்த தம்பதி அதற்குள் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டனர். ஒரு கடிதத்தில் இறுதி சடங்குக்கு ஒரு லட்சம் ரூபாய் வைத்துள்ளதாகவும், தங்களது சொத்துக்களை ஆதரவற்றோர் இல்லத்திற்கு கொடுத்துவிடுமாறு எழுதிருந்தனர். கொரோனா குறித்து ஏற்பட்ட பயத்தால், கிருஷ்ணகிரி அருகே 10ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
கடந்த ஜூன் மாதம் திருமுல்லைவாயிலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொரோனா வந்துவிடும் என்கிற பயத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த மே மாதம், கொரோனா தொற்றில் இருந்து மீண்ட 80வயது முதியவர் - கருப்பு பூஞ்சை பயத்தால் தற்கொலை செய்துக்கொண்டது பரிதாபத்தை ஏற்படுத்தியது. கடந்த மே மாதம், கொரோனா நோய் பயத்தால் செங்கல்பட்டு மருத்துவமனையில் தூக்கு போட்டு தற்கொலை செய்த நோயாளி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.