நவீன கால மாற்றத்தால், உடல் எடை அதிகரிப்பு நம்மில் பலர் எதிர்கொள்ளும் பிரச்சனையாக இருந்து வருகிறது.
நவீன கால மாற்றத்தால், உடல் எடை அதிகரிப்பு நம்மில் பலர் எதிர்கொள்ளும் பிரச்சனையாக இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், மேற்கத்திய கலாச்சாரம், உணவு பழக்கவழக்கம், முறையான உடற்பயிற்சி இல்லாமை, உடல் உழைப்பில்லாமை, மன அழுத்தம் போன்றவையாகும்.

உடல் எடையைக் குறைக்க எண்ணுபவர்கள், தாங்கள் கட்டுடல் மேனியாக இருப்பதற்கு பல்வேறு டயட் முறைகளைப் பின்பற்றுவார்கள். உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி செய்வதும், தினமும் காலை எழுந்தவுடன் ஜிம்முக்கு சென்று வருவதும், இதெல்லாம் இருக்கும். அவற்றுள், சிலர் எடையைக் குறைக்கவும், ஆன்மிக அடிப்படையிலும் விரதம் இருப்பார்கள்.
அசைவ உணவைத் தவிர்த்து மற்ற உணவுகளைச் சாப்பிடுதல், ஒரு வேளை, இரண்டு வேளை உணவு சாப்பிடுதல், வெறும் பழங்களை மட்டும் சாப்பிடுதல், உப்பு சுவையைத் தவிர்த்து உணவு சாப்பிடுதல் என்று பல்வேறு விதங்களில் விரதம் மேற்கொள்ளப்படுகிறது.
விரதம், இருப்பதால் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். புத்துணர்வு பெறும். விரதத்திற்கு பின் எளிதில் செரிமானமாகக் கூடிய உணவைச் சாப்பிடுவது நல்லது. அது தவிர, நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ள உணவைச் சாப்பிடலாம். இது உடலின் இயக்கத்தை சீராக்கும்.
பொதுவாக, விரதம் இருக்கும்போது செரிமான மண்டலம் ஓய்வு நிலையில் இருக்கும். இந்த நேரத்தில் உடலில் நடைபெறும் சிறுசிறு செயல்களையும் நம்மால் உணர முடியும். இது செல்களின் வளர்ச்சிக்கும், புத்துணர்ச்சிக்கும் உதவும்.
உண்ணும் உணவு செரிப்பதற்கு ஆறு முதல் எட்டு மணி நேரம் ஆகும். பின்னர் இது ஆற்றலாக மாறும். இந்தக் கால இடைவெளிக்குக் குறைவாக, தொடர்ந்து சாப்பிடும்போது, உடலின் தேவைக்கும் அதிகமான ஆற்றல் கொழுப்பாக சேமிக்கப்படும். இவ்வாறு சேமித்து வைக்கப்பட்டிருக்கும் சக்தியை விரதம் இருக்கும் நேரத்தில் உடல் பயன்படுத்திக்கொள்ளும்.
ஆனால், உடல் எடை குறைத்தல் என்பது ஒவ்வொருவரின் உடல் அமைப்பையும், செயல்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டது. உடல் எடையைக் குறைப்பதற்காக விரதம் இருப்பது பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். உணவு உண்ணாமல், தண்ணீர் பருகாமல் இருப்பது உடலில் நீர் வறட்சியை உண்டாக்கும்.
மேலும், பலர் விரதம் கடைபிடிக்கும் முறையில் காலை உணவைத் தவிர்த்து, மதிய உணவை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவார்கள். இது உடலில் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். இதைத் தொடர்ந்து செய்யும்போது உடலில் ஊட்டச்சத்து குறைபாடு உண்டாகும்.

மொத்தத்தில், விரதம் இருப்பது உடல் எடையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளவும், உடலின் உள் உறுப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவும் என்பதும் உண்மை தான். அதேசமயம், அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதை கருத்தில் கொண்டு, உடல் எடையைக் குறைப்பதற்காக தீவிரமாகக் கடைப்பிடிப்பதை விட்டு விடுங்கள். ஏனெனில், உடலின் முழு இயக்கத்துக்கு ஆரோக்கியமான மற்றும் சரிவிகித ஊட்டச்சத்து உணவு எப்போதும் அவசியம்.
