சர்வதேச குடும்ப தினம் 2023: தனித்து வாழ்வதை விட ஒரு குடும்பமாக வாழ்வது முக்கியம்.. ஏன் தெரியுமா?
INTERNATIONAL FAMILY DAY 2023: சர்வதேச குடும்ப தினம் மே மாதம் 15ஆம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது.
குடும்பத்தின் முதுகெழும்பாக திகழும் அம்மாவின் அர்ப்பணிப்பை நினைத்து பார்க்கும் வகையில் நேற்று (மே.14) அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. ஒரு குடும்பத்தை இணைக்கும் பாலமாக, அதை அன்பால் தாங்கி கொள்ளும் ஆணி வேராக அம்மா இருக்கிறார். இன்றைய தினம் சர்வதேச குடும்ப தினமாக அனுசரிக்கப்படுகிறது.
ஒரு குடும்பம் பிணைப்போடு இருக்க சகிப்புத்தன்மை அவசியம். ஒருவரின் பிழைகளை ஒருவர் சகித்து, அதை சுட்டிக் காட்டி அல்லது தவறை உணர்த்தும்போது தான் அந்த தவறுகள் மாறுகின்றன. குடும்ப அமைப்பு இப்படி தான் இயங்குகிறது. இன்றைய காலக்கட்டத்தில் ஒருவரை ஒருவர் பொறுத்து கொள்வது குறைந்து வருகிறது. இந்நிலையில் குடும்பங்களின் முக்கியத்துவம், சமூகத்தில் அவற்றின் பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மே 15ஆம் தேதி அன்று சர்வதேச குடும்ப தினம் கொண்டாடப்படுகிறது.
நம் சமூகத்தில் குடும்பங்கள் வகிக்கும் முக்கிய பங்கு குறித்து இந்த நாள் கவனம் செலுத்துகிறது. அதே நேரத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் முன்னிலைப்படுத்துகிறது.
குடும்பங்கள் தின வரலாறு
1994ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையானது குடும்ப அமைப்பை கொண்டாடுவதற்கும், குடும்பங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் சர்வதேச குடும்ப தினத்தை ஏற்படுத்தும் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது.
இந்தாண்டின் கருப்பொருள்
ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு கருப்பொருளுடன் சர்வதேச குடும்ப தினம் அனுசரிக்கப்படுகிறது. 2023 ஆம் ஆண்டின் சர்வதேச குடும்பங்கள் தினத்தின் கருப்பொருள் 'குடும்பங்கள் மற்றும் மக்கள்தொகை போக்கு' என்ற பெயரில் அனுசரிக்கப்படுகிறது. கடந்தாண்டு சர்வதேச குடும்ப தினத்தின் கருப்பொருள் ‘குடும்பங்களும் நகரமயமாக்கலும்’ என்பதாகும். குடும்பங்களின் பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதற்கும், அவற்றின் தனித்துவமான பிணைப்பை வலுப்படுத்துவதற்கும் குடும்பங்களை ஒன்றிணைக்கும் பல்வேறு நிகழ்வுகள், செயல்பாடுகளை நடத்துவதன் மூலம் இந்த விழாவை கொண்டாடுகின்றனர்.
இதையும் படிங்க: Mothers Day 2023: ஒவ்வொரு அம்மாவும் கொண்டாடப்பட வேண்டியவர்! அன்னையர் தின வரலாற்று முக்கியத்துவம் தெரியுமா?
முக்கியத்துவம்
- எந்தவொரு சமூகத்திற்கும் குடும்பங்கள் தான் அடித்தளம். அவை தனிநபர்களின் மதிப்புகள், நம்பிக்கைகளை செறிவூட்ட உதவுகின்றன. அதே நேரத்தில் குடும்பங்கள் அடையாள உணர்வையும் வழங்குகின்றன.
- வறுமை, சமத்துவமின்மை போன்ற குடும்பங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் அதே வேளையில் நமது சமூகத்தில் குடும்பங்களின் பங்கை அங்கீகரிப்பதில் சர்வதேச குடும்ப தினம் முக்கிய பங்கு வகிக்கிறது.
குடும்ப அமைப்பு தனிமனிதர்களின் தனிமையையும், வெறுமையையும் போக்கும். ஆனால் அதற்கு குடும்ப அமைப்பில் வெளிப்படைத்தன்மையும், ஒருவர் மற்றவர்களின் உணர்வை மதிக்கும் பண்பும் தேவை. கௌரவம், சமூகத்தின் மீதான அச்சம் காரணமாக உங்கள் குழந்தைகளின் ஆசைகளை விருப்பங்களை நசுக்கினால் அவர்கள் குடும்பத்தை வெறுக்க நேரிடும். பகுத்தறிவுடனும் அன்புடனும் குடும்பத்தை பராமரியுங்கள். இனிய குடும்பதின வாழ்த்துகள்.
இதையும் படிங்க: வாஸ்துபடி இந்த தவறுகளை ஒருபோதும் செய்யாதீங்க.. மீறினா வாழ்க்கையில் ஒருநாளும் வெற்றி பெறவே முடியாது!