மொய் பணத்துக்கு கம்ப்யூட்டர் ரசீது - காதணி விழாவில் கலக்கல்... இதுதான் டிஜிட்டல் இந்தியாவா?
தென்னிந்திய மக்களோட கலாச்சாரத்தில் பல சிறப்புகள் இருந்தாலும் , ஒரு சில முறைகள் என்றும் மக்களால் பின்பற்றப்படும் என்பதற்கான உதாரணம் தற்போது நடந்துள்ளது .
எந்த ஒரு விழாவாக இருந்தாலும் , அதாவது காதணி விழா, திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்சிகள் அனைத்திற்கும் உற்றார் உறவினர்களை அழைப்பது வழக்கம் .
அவ்வாறு விழாவிற்கு வரும்உற்றார் உறவினர்கள் பலரும், தங்களால் இயன்றதை அன்பளிப்பாக “ மொய்” என்ற பெயரில் பணத்தையோ அல்லது சற்று விலை உயர்ந்த பொருளையோ கொடுப்பார் .
இதே போன்று , மற்றவர்கள் வீட்டு விழாவிற்கு செல்லும் போது, இதற்கு முன்னதாக அவர்கள் தங்கள் வீட்டு விழாவிற்கு எப்படி மொய் செய்தார்களோ அதே போன்று அவர்களுக்கும் செய்வர் என்பது குறிப்பிடத்தக்கது .
இவ்வாறு செய்யப்படும் அன்பளிப்பு “மொய்“ சில சமயத்தில் மறந்துக்கூடபோகும் . ஆனால் தற்போது விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்பவும் ,
டிஜிட்டல் இந்தியா கனவிற்கு ஏற்பவும் தற்போது மதுரை செக்கானூரணியில் இன்று நடந்த காதணி விழாவில் மொய் வைப்பதற்கு கம்ப்யூட்டரில் ரசீது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது . இதற்காக தனியாக ஒரு சாப்டுவேர் ரெடி செய்யப்பட்டுள்ளது என்றால் பாருங்களேன்.
இதன் மூலம், யாரெல்லாம் அன்பளிப்பு கொடுத்துள்ளார்கள் , எவ்வளவு பணம் கொடுத்துள்ளார்கள் என சுலபமாக தெரிந்துக் கொள்ள முடியும் . அதுமட்டுமின்றி நொடி பொழுதில், ஒட்டு மொத்தமாக எவ்வளவு பணம் அன்பளிப்பாக கிடைத்துள்ளது என்பதையும் தெரிந்துக் கொள்ள முடியும் .
இதன் மூலம் கலாசாரம் பழக்க வழக்கங்கள் மாறமால் , அனைத்திலும் தொழில் நுட்ப வளர்ச்சியை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது உறுதியாகிவிட்டது