டெல்டா வைரஸ் மிக மோசமானது.. தடுப்பூசி போடாதவர்களை தாக்கியே தீரும்.. உலக சுகாதார நிறுவனம் பகீர்..!
டெல்டா வகை வைரஸ்கள் உலகிற்கு புதிய கவலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த வகை வைரஸ் மிக தீவிரமாக பரவக் கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. குறிப்பாக, தடுப்பூசி போடாத மக்களிடையே இந்த வகை வைரஸ்கள் வேகமாக பரவி சமூக பரவலை ஏற்படுத்தக் கூடும்.
மக்களிடையே இதுவரை பரவிய கொரோனா வைரஸ் வகைகளில் டெல்டா வகை உருமாறிய கொரோனாதான் அதிக வேகமும் ஆபத்தும் கொண்டது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ், பல்வேறு நாடுகளில் மரபணு மாற்றம் அடைந்துள்ளது. இங்கிலாந்து, பிரேசில், தென்ஆப்பிரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து இருக்கிறது. இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரசுக்கு டெல்டா என்று பெயரிடப்பட்டுள்ளது.
மேலும், டெல்டா வகை வைரஸ் மீண்டும் உருமாற்றம் அடைந்து டெல்டா பிளஸ் வைரஸ்களும் பரவி வருகிறது. இந்த டெல்டா வகை வைரஸ் 85 நாடுகளில் பரவி உள்ளதாக தெரிவித்துள்ளனர். டெல்டா வகை வைரஸ் மிகவும் வேகமாக பரவக்கூடியது. மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளதால் உலக நாடுகளின் புதிய அச்சுறுத்தலாக மாறி உள்ளன.
இதுதொடர்பாக உலக சுகாதார தலைவர் டெட்ரோஸ் அதானம் பேட்டியளிக்கையில்;- டெல்டா வகை வைரஸ்கள் உலகிற்கு புதிய கவலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த வகை வைரஸ் மிக தீவிரமாக பரவக் கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. குறிப்பாக, தடுப்பூசி போடாத மக்களிடையே இந்த வகை வைரஸ்கள் வேகமாக பரவி சமூக பரவலை ஏற்படுத்தக் கூடும். அனைவருக்கும் தடுப்பூசி போட்டால் மட்டுமே டெல்டா பரவலை கட்டுப்படுத்த முடியும் என்றார்.