மகத்துவம் மிகுந்த வெள்ளிக்கிழமை அன்று,  கணவருக்கு நீண்ட ஆயுளும், சகல சௌபாக்கியங்களும் அள்ளி தரும் வெள்ளிக்கிழமை விரதம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.  

மகத்துவம் மிகுந்த வெள்ளிக்கிழமை அன்று, கணவருக்கு நீண்ட ஆயுளும், சகல சௌபாக்கியங்களும் அள்ளி தரும் வெள்ளிக்கிழமை விரதம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வெள்ளிக்கிழமை விரதத்தின் மகிமை பற்றி விரிவாக பார்க்கலாம்.

வெள்ளிக்கிழமை விரதம் முருகப்பெருமான், லட்சுமிதேவி, நவக்கிரகங்களில் ஒருவரான சுக்ரன் ஆகியோரின் அருளைப் பெறுவதற்காக கடைப்பிடிக்கப்படும் விரதம் என்று கூறப்படுகிறது. ஆக, வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து வந்தால், லட்சுமி, முருகன், சுக்ரன் ஆகிய மூன்று பேரின் அருளைப் பெறலாம்.

ஒருமுறை வெள்ளிக்கிழமை அன்று லட்சுமி ஒரு வீட்டைச் சென்று பார்த்தாள். அந்த வீடு குப்பையாகவும், அசுத்தமாகவும் இருந்தது. லட்சுமி தேவி அந்த வீட்டுக்குள் செல்லாமல் வேறு ஒரு வீட்டுக்குப் போனாள். அந்த வீடு சுத்தமாக இருந்தது. அதுதான் வாசம் செய்வதற்கு ஏற்ற வீடு என எண்ணிய லட்சுமி, அந்த வீட்டுக்குள் நுழைந்தாள்.

அந்த இல்லத்தின் தலைவியான சோமதேவம்மாள் என்பவரிடம் வெள்ளிக்கிழமை விரதம் எப்படி அனுஷ்டிக்கப்படுகிறது என்று கற்றுக்கொடுத்தாள். மேலும் லட்சுமிதேவி நுழைந்த அந்த வீடு செல்வத்தால் நிறைந்தது. லட்சுமிதேவியே இந்த விரதத்தைப் பற்றி சிறப்பாக கூறியிருக்கிறாள் என்றால், அந்த விரதத்தின் மகிமையை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

வெள்ளிக் கிழமை விரதம் இருக்க நினைப்பவர்கள், முதலில் ஏதாவது ஒரு மாதத்தில் வரும் மூன்றாவது அல்லது கடைசி வெள்ளிக்கிழமையை தேர்வு செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் அதிகாலை எழுந்து வீட்டை சுத்தப்படுத்தி, கோலம் போட்டு வைக்க வேண்டும். வீட்டை எப்போதும் சுத்தமாகவே வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வது நம் வீட்டில் லட்சுமி கடாட்சத்தை கொண்டுவரும் என்று ஆன்மிக ரீதியாக கூறப்பட்டாலும், சுத்தம் எப்போதுமே நன்மை அளிக்கக்கூடியது அல்லவா?

வெள்ளிக்கிழமை தோறும் வீட்டை சுத்தம் செய்ததும், விரதம் இருப்பவர்களும் நீராடிவிட்டு வந்து வீடு முழுவதும் சாம்பிராணி புகை போட்டு தெய்வீக மணம் கமழச் செய்ய வேண்டும். பிறகு மகாலட்சுமி படத்தை அலங்கரிக்கவும். காலையில் ஸ்ரீமகாலட்சுமி படத்தை 12 அல்லது அதன் மடங்கு களில் வலம் வரவும். பால், பழம் அல்லது பாயாசம் நைவேத்தியம் செய்யவும். நெய் தீபம் ஏற்றவும். ஒரு நாள் முழுவதுமாக உபவாசம் இருக்க முடியாதவர்கள், பால், பழம் போன்றவற்றை மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். விரத நாள் முடிந்ததும் சுவாமியின் படத்திற்கு சிறப்பு பூஜை செய்து விரத்தை முடித்துக் கொள்ளலாம்.

தொடர்ந்து 11 வாரங்கள் வெள்ளிக் கிழமையில் விரதம் இருந்து வந்தால் கணவருக்கு நீண்ட ஆயுளும், சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். பகீரதன் என்னும் மன்னன் இந்த விரதத்தை கடைப்பிடித்து, தான் இழந்து போன தனது அரசுரிமையை திரும்பப் பெற்றான் என்ற வரலாறும் உண்டு. மகாலட்சுமி அஷ்டகம் அல்லது மகாலட்சுமி துதியை 3 முறை பாடவும். நைவேத்தியத்தை பெண் குழந்தைகளுக்கு (பிரசாதமாக) பகிர்ந்து கொடுக்கவும். அதுமட்டுமின்றி, வெள்ளிக்கிழமைகளில் சூரியன் உதயமான இரண்டு மணி நேரத்திற்குள் பூஜிப்பது, தரிசனம் செய்வது ஆகியவை வீட்டிற்கு நன்மை தரும். எனவே, மேற் சொன்ன விரதங்களை கடைபிடிப்பது நல்ல பலன் தரும்.