பெண்களின் படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டிய இளைஞர் கைது!
பெண்களின் படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து, பணம் மற்றும் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த சட்டக்கல்லூரி மாணவனை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ளது.
ஆந்திர மாநிலம், உப்படா கோட்டப்பள்ளியைச் சேர்ந்தவர் செம்மிரெட்டி ஸ்ரீனிவாசராவ். இவர் காக்கிநாடாவில் உள்ள ராஜீவ் காந்தி சட்டக்கல்லூரியில் பயின்று வருகிறார்.
சமூக வலைத்தளங்கள் மூலம், இன்ஜினியரிங் கல்லூரி மாணவிகளிடம், திருமணத்துக்கு பெண் தேடுவதாக கூறி அவர்களுடனான தொடர்பை வளர்த்துக் கொள்வார். அது மட்டுமல்லாது அந்த பெண்களிடம் இருந்து புகைப்படங்களையும் செம்மிரெட்டி பெற்றுக் கொள்வார்.
பின்னர் அந்த படங்களை, நிர்வாணமாக மார்பிங் செய்வார் செம்மிரெட்டி. மார்பிங் செய்யப்பட்ட அந்த படங்களை குறிப்பிட்ட பெண்களுக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பி அதிர்ச்சியை ஏற்படுத்துவார்.
இதன் மூலம், அந்த பெண்களிடம் செம்மிரெட்டி பணம் மற்றும் நகைகள் பெற்று வந்துள்ளார். அப்படி பணமோ நகையோ தரவில்லை என்றால், மார்பிங் செய்யப்பட்ட அந்த ஆபாச படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விடுவதாக மிரட்டுவார். இதன் மூலம் செம்மிரெட்டி பணம் சம்பாதித்து வந்துள்ளார்.
இதனை வெளியே சொல்ல முடியாமல் பெண்கள் தவித்து வந்தனர்.
இந்த நிலையில் செம்மிரெட்டி மீது, காக்கிநாடா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. செம்மிரெட்டியால் பாதிக்கப்பட்ட பெண்கள் இந்த புகாரை அளித்துள்ள்னர். இதனைத் தொடர்ந்து செம்மிரெட்டியை நேற்று போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.