இந்தியா வந்த இஸ்ரேல் பிரதமருக்கு உற்சாக வரவேற்பளித்த மோடி!
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு 6 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். தில்லி விமான நிலையம் வந்திறங்கிய அவரை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார்.
கடந்த 15 ஆண்டுகளுக்குப் பின்னர் இஸ்ரேல் பிரதமர் இந்தியா வருகிறார் என்பதால், பெருத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 6 நாள் அரசு முறை பயணமாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ தில்லி வந்தடைந்தார். இஸ்ரேல் பிரதமரின் இந்த பயணத்தில் வர்த்தகம் மற்றும் பாதுகாப்புத் துறை குறித்த விஷயங்கள் முக்கிய விவாதத்தில் உள்ளது. நாளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை முதலில் சந்திக்கிறார். தொடர்ந்து அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த பயணங்களில் ஒரு கட்டமாக, நெதன்யாஹு குஜராத்துக்கும் செல்லவுள்ளார்.
முன்னதாக, இஸ்ரேல் தலைநகரகா ஜெருசலேத்தை அங்கீகரித்து அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில் இந்தியா எதிராக ஐ.நா.வில் வாக்களித்தது. ஆனால் அண்மையில் இஸ்ரேல் சென்ற இந்தியப் பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து கௌரவித்தது இஸ்ரேல்.
இந்நிலையில், இந்தியாவுக்கு வரும் இஸ்ரேல் பிரதமரை கட்டித் தழுவி வரவேற்றுள்ள மோடி, தனது டிவிட்டர் பதிவில் இரு நாட்டு உறவுகளும் மேலும் வலுப்படும் என்று கூறியுள்ளார்.