சிறுமியை கற்பழித்த வாலிபர்கள்.... காவல் நிலையத்தில் வைத்து அடித்தே கொன்ற ஊர் மக்கள்...
கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளியை பொதுமக்களே அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அருணாசலப்பிரதேச மாநிலம் லோகித் மாவட்டம் தேசு என்ற இடத்தின் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சிறுமி கடந்த 12-ந்தேதி திடீர் என்று மாயமாகி விட்டாள்.
நேற்று காலை சிறுமி நம்கோ கிராமத்தில் காட்டுப் பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தாள். போலீசார் விசாரணை நடத்தி தேயிலை தோட்ட ஊழியர்கள் சஞ்சய் கோபர், ஜெகதிஷ் லேகர் ஆகிய 2 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இருவரையும் வாக்ரோ போலீஸ் நிலையத்தில் லாக்கப்பில் அடைத்து வைத்து விசாரணை நடத்திக் கொண்டு இருந்தனர். கற்பழிப்பு குற்றவாளிகள் கைதான தகவல் அறிந்த கிராம மக்கள் போலீஸ் நிலையம் முன் திரண்டனர்.
அப்போது, அந்த சிறுமியை கற்பழித்த 2 காமக் கொடூரர்களை பார்த்ததும் திடீரென்று ஆவேசம் அடைந்த பொதுமக்கள் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்தனர். லாக்கப்பை உடைத்து 2 குற்றவாளிகளையும் அங்கிருந்து தூக்கிச் சென்று சரமாரியாக அடித்து உதைத்து தாக்கினார்கள். இதில் இருவரும் லாக்கப்பிலேயே துடி துடித்து இறந்தனர். பின்னர் இருவரது பிணங்களையும் தீ வைத்து எரிக்க முயன்றனர். இதற்குள் அங்கு விரைந்து வந்த போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி போலீஸார் கூறுகையில், போலீஸ் நிலையத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டதால் 2 குற்றவாளிகளையும் பாதுகாக்க முடியவில்லை. அவர்களை அடித்தே கொன்றுள்ளனர். இதைத் தடுத்த போலீஸ்காரர்களையும் தாக்கி விட்டனர்.