‘என் காவி உடையைப் பார்த்து தப்பா நினைக்கிறாங்க’…உ.பி. முதல்வர் யோகி ஆதித்தயநாத் ‘உருக்கம்’
நான் அணியும் காவி உடையால் தவறான கருத்து பரப்பப்பட்டுள்ளது. ஆனால், நம்பிக்கை, வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் அனைவரின் மனதையும் நான் வெற்றி கொள்வேன் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஆதித்யநாத்
உத்தரப்பிரதேசத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று 15 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியைப் பிடித்துள்ளது. அந்த மாநிலத்தின் முதல்வராக கோர்க்பூர் தொகுதி எம்.பி.யும் மடாதிபதியுமான யோகி ஆதித்யநாத்பதவி ஏற்றார்.
அதிரடி நடவடிக்கை
இவர் முதல்வரான பின் எடுத்துவதும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள், நிர்வாக சீர்திருத்தங்கள், பசுவதைக்கு தடை, சட்டவிரோத இறைச்சிக்கடைக்கு தடை உள்ளிட்ட பல நடவடிக்கையால் மக்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளார்.
இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ‘ஆர்கனைசர்’ நாளேட்டுக்கு முதல்வர்ஆதித்யநாத் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-
காவி உடை
நான் அணிந்திருக்கும் காவி உடையால், தவறான கருத்துக்கள் உருவாகி, பரப்பப்படுகின்றன. நான் காவி உடை அணிந்தவன் எனக் கூறுகிறார்கள். இந்த நாட்டில் உள்ள பெரும்பாலானோர் காவிப் பார்த்து நெருங்கிச் செல்ல தயங்குகிறார்கள்.
மதச்சார்பின்மை
மதச்சார்பின்மை என்ற பெயரில் நாட்டின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும்சிலர் புண்படுத்துகிறார்கள். நான் முதல்வராக பதவி ஏற்றபின், மிரட்டப்படுவதாக கூறுகிறார்கள்.
பரப்புவோம்
நாங்கள் பணி செய்யும் விதத்தின் மூலம் அனைத்து தரப்பு மக்களின் இதயங்களையும் வெல்வோம். நாங்கள் வளர்ச்சியையும், நம்பிக்கையையும்மக்களிடம் பரப்புவோம்.
என்னுடைய அதிகாரம் என்பது விளையாட்டுக்கும், கேளிக்கைக்கும் உண்டானது கிடையாது. கவுரவமான பதவிக்கும், மரியாதைக்கும் நாங்கள் அரசியலுக்கு வரவில்லை.
நல்லநிர்வாகம்
என் அரசின் முன்னுரிமை என்பது, தேசத்தையும், மதத்தையும் பாதுகாப்பதுதான். அதுதான் முக்கிய தர்மமாகும். இதுதான் மனிதர்களின் முக்கிய நோக்கம். உத்தரப்பிரதேசத்தில் என் அரசு ஊழல் இல்லாத நிர்வாகத்தையும், குண்டர்கள், ரவுடிகள் இல்லாத சூழலையும் மக்களுக்கு வழங்கும்.
14 நாட்களில்
புதிய தொழில்கொள்கை உருவாக்கப்பட்டு, இங்குள்ள தொழில்அதிபர்கள் வெளிமாநிலத்துக்கு செல்லாமல் தடுக்கப்படும். இந்தமாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு 90 சதவீதம் இங்கேயே வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அடுத்த 14 நாட்களில் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகை அளிக்கப்படும். அடுத்த 6 மாதங்களில் 5 முதல் 6 புதிய சர்க்கரை ஆலைகள் திறக்கப்படும்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.