ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்யஏசுதாசுக்கு அனுமதி!
கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய பாடகர் கே.ஜே. ஏசுதாசுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கோயிலை நிர்வகிக்க உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட நிர்வாகக் குழு கூடி ஏசுதாசின் வேண்டுகோள் கடிதத்தை ஏற்றுக்கொண்டு அவரை அனுமதிப்பதாக முடிவு செய்தது.
பிரபல பாடகரான கே.ஜே. ஏசுதாஸ் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவ குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்து கடவுள்கள் குறித்து ஏராளமான பாடல்களை பாடியுள்ள ஏசுதாஸ், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் சென்று வருகிறார். அதேபோல, கர்நாடகாவில், கொல்லூரில் உள்ள மூகாம்பிகா தேவி கோயிலுக்கு ஏசுதாஸ் அடிக்கடி சென்று வருகிறார்.
ஆனால், ஏசுதாஸ் இந்து அல்லாதவர் என்பதால், குருவாயூர் கிருஷ்ணன் கோயில், மலப்புரத்தில் உள்ள கடம்பபுழா தேவி கோயிலுக்குள் நுழைய அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்நிலையில், திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலுக்கு செல்ல அனுமதிக்க கோரியும், இந்து மதத்தின் மீதான நம்பிக்கை குறித்தும் கோயில் நிர்வாகத்துக்கு சமீபத்தில் கடிதம் அனுப்பி இருந்தார்.
அது குறித்து கருத்து தெரிவித்த கோயில் நிர்வாகம், இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்ட யார் வேண்டுமானாலும் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலில் சாமி தரிசனம்செய்யலாம். அதற்கு தடை ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பாடகர் ஏசுதாஸின் கடிதம் குறித்து கோயில் நிர்வாகக் குழு, தலைமை தந்திரி, கோயில் தலைமை தந்திரி, நிர்வாக அதிகாரி, உறுப்பினர்கள் ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து கோயில் நிர்வாக அதிகாரி வி.ரதீசன் கூறுகையில், “ பாடகர் கே.ஜே.ஏசுதாஸ் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு அவர் கோயிலுக்குள் செல்ல அனுமதிப்பது என ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டது. இதுகுறித்து அவருக்கு முறைப்படி தெரிவிப்போம். அவர்தான் இனி கோயிலுக்கு எப்போது வருவது என்பதை முடிவு செய்ய ேவண்டும்’’ என்றார்.