சிகிச்சை அளிக்க மறுக்கிறார்கள்.. மகளை கருணைக் கொலை செய்து விடுங்கள்.. தாயின் கண்ணீர் கடிதம்!!
மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகளுக்கு மருத்துமனையில் சிகிச்சை அளிக்க மறுப்பதால் கருணை கொலை செய்து விடுங்கள் என்று ஆந்திர ஆளுநருக்கு பெண் ஒருவர் கடிதம் எழுதி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் ஸ்வர்ணலதா. இவரது மகள் ஜானவி. ஜானவிக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். இதன் காரணமாக அங்கிருக்கும் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.
அந்த மருத்துவமனையில் தான் ஜானவியின் தந்தை உதவியாளராக பணிபுரிந்து வந்திருக்கிறார். இதனால் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் அங்கேயே சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.
இந்த நிலையில் அந்த மருத்துவனையில் புதிய தலைமை மருத்துவர் பொறுப்பேற்றிருக்கிறார். அவர் வந்த பிறகு ஜானவிக்கு அங்கு சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த ஸ்வர்ணலதா தனது மகளை கருணை கொலை செய்து விடுமாறு ஆளுநருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
எனது மகள் ஜானவி 4 வயது முதலே மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் என் கணவர் மருத்துவ உதவியாளராக பணிபுரியும் மருத்துவமனையில் பல ஆண்டுகளாக மகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் தலைமை மனநல மருத்துவராகப் பொறுப்பேற்ற டாக்டர் ராஜ்யலட்சுமி என்பவர் எனது மகளுக்கு அங்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்க அனுமதியளிக்க மறுத்துவிட்டார். என் மகள் வலியால் துன்பப்படுவதை என்னால் பார்க்க முடியவில்லை. இதனால் அந்த மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுங்கள் அல்லது எனது மகளை கருணை கொலை செய்ய அனுமதியுங்கள்.
இவ்வாறு ஜானவியின் தாய் ஆளுநருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
முறையான சிகிச்சை மறுக்கப்பட்டதால் பெற்ற தாயே தனது மகளை கருணை கொலை செய்ய சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.