ஓயின் ஷாப் எதிரில் நடந்த மோதல் தொடர்பாக இதுவரை பத்து பெண்களை போலீசார் கைது செய்து உள்ளனர். இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

டெல்லியில் ஓயின் ஷாப் ஒன்றின் வெளியில் நடைபெற்ற போராட்டம் மோதலில் நிறைவு பெற்றது. மோதலில் ஈடுபட்ட பத்து பெண்களை போலீசார் அதிரடியாக கைது செய்து உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சம்பவம் நடைபெற்ற பகுதியில் புதிதாக ஓயின் ஷாப் திறக்கப்படக் கூடாது என அந்த பகுதியில் வசிக்கும் பெண்கள் வலியுறுத்தி வந்துள்ளனர். எனினும், அந்த பகுதியில் ஓயின் ஷாப் திறக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், ஓயின் ஷாப்-ஐ மூட வலியுறுத்தியும் பெண்கள் ஒன்றாக சேர்ந்து கொண்டு போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி கடந்த வியாழன் கிழமை இரவு உள்ளூர் பகுதி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடும் மோதல்:

போராட்டத்தின் போது ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் நிறைவடைந்தது. ஒரு கட்டத்தில் ஓயின் ஷாப்பில் பணியாற்றி வந்த பெண் ஊழியர்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதை கண்ட திக்டி காவல் நிலைய போலீஸ் தலைமை கான்ஸ்டபில் ரஞ்சித் மோதலை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.

எனினும், போலீஸ் நடவடிக்கையை பொருட்படுத்தாமல், தொடர்ந்து அவர்கள் தாக்கிக் கொண்டனர். மேலும் தடுக்க வந்த போலீஸ் தலைமை கான்ஸ்டபில் ரஞ்சித்தையும் தாக்கினர். இதில் அவரது சீருடை கிழிந்து விட்டது. சிறிது நேரம் கழித்து அங்கு விரைந்த போலீஸ் குழு மோதலை தடுத்து நிறுத்தி, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தது. இந்த மோதலில் காயமுற்றவர்கள் ஏய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஓயின் ஷாப் எதிரில் நடந்த மோதல் தொடர்பாக இதுவரை பத்து பெண்களை போலீசார் கைது செய்து உள்ளனர். இவர்கள் மீது போராட்டம் நடத்தியது, உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

போலீஸ் நடவடிக்கை:

“இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பத்து பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த பகுதியில் தற்போது நிலைமை கட்டுக்குள் வந்து இருக்கிறது. மேலும் அந்த பகுதியில் பதற்றம் ஏற்படாமல் தடுக்கும் விதமாக கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்,” என தெற்கு பிரிவுக்கான காவல் துறை துணை ஆணையர் பெனிதா மேரி ஜெய்கர் தெரிவித்து இருக்கிறார்.